பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 20, 2014

17 மணிநேரம் பக்கிங்காம் கால்வாயில் தோணியில் பயணித்து மாவலிபுரம் சேர்ந்த உண்மை நிகழ்வு !





மாவலிபுரச்  செலவு

 ( செலவு -பயணம் )

ஒரு  நாள்  மாலை  4  மணிக்குச்  சென்னை,  பக்கிங்காம்  கால்வாயிற் தோணியில்  ஏறி,  மறுநாள்  காலை  9  மணிக்குத் தன்  நண்பர்களுடன்   மாவலிபுரம்   சென்றடைகின்றார் பாரதிதாசன்,  .

அவரும்,  அவர்  தோழர்  பலரும்,  வழிப்போக்கின்  இடைநேரம் இனிமையாகக் கழித்தனர்.  எனினும்,  அப்பெருந்  தோணியைக்  கரையோரமாக  ஒரு கயிறுபற்றி  ஒருவன்  இழுத்துச்  சென்றமையும்,  மற்றோர்  ஆள்  பின்புறமாக ஒரு  நீளக்  கழியால்  தள்ளிச்  சென்றமையும்  இரங்கத்தக்க  காட்சியாய் அமைந்தது  என்று  குறிப்பிடுகிறார்.

அதையும்  ஆங்குக்  கண்ணைக்  கவர்ந்த  மற்றும்  சில  காட்சிகளையும் விளக்கி  அப்போது  எழுதிய  பாட்டு.



சென்னை  யில்ஒரு  வாய்க்கால்  -புதுச்
சேரி  நகர்  வரை  நீளும்.

அன்னதில்  தோணிகள்  ஓடும்  - எழில்
அன்னம்  மிதப்பது  போல.

என்னருந்  தோழரும்  நானும்  - ஒன்றில்
ஏறி  யமர்ந்திட்ட  பின்பு

சென்னையை  விட்டது  தோணி  - பின்பு
தீவிரப்  பட்டது  வேகம்.

தெற்குத்  திசையினை  நோக்கி  -  நாங்கள்
சென்றிடும்  போது  விசாலச்

சுற்றுப்  புறத்தினில்  எங்கும்  - வெய்யில்
தாவிடும்  பொன்னொளி  கண்டோம்.

நெற்றி  வளைத்து  முகத்தை  - நட்டு
நீரினை  நோக்கியே  நாங்கள்

அற்புதங்  கண்டு  மகிழ்ந்தோம்  - புனல்
அத்தனையும்  ஒளி  வானம்.

சஞ்சீவி  பர்வதச்  சாரல்  என்று
சாற்றும்  சுவடி  திறந்து

சஞ்சார  வானிலும்  எங்கள்  - செவி
தன்னிலும்  ஏற்றி

அஞ்சாறு  பக்கம்  முடித்தார்  - மிக்க
ஆசையினால்  ஒரு  தோழர்

செஞ்சுடர்  அச்சம  யத்தில்  - எம்மைச்
செய்தது  தான்  மிக்க  மோசம்

மிக்க  முரண்  கொண்ட  மாடு  - தன்
மூக்குக்  கயிற்றையும்  மீறிப்-

பக்க  மிருந்திடும்  சேற்றில்  - ஓடிப்
பாய்ச்சிடப்  பட்டதோர்  வண்டிச்

சக்கரம்  போலிருள்  வானில்  - முற்றும்
சாய்ந்தது  சூரிய  வட்டம்!

புக்க பெருவெளி  யெல்லாம்  - இருள்
போர்த்தது !  போனது  தோணி.

வெட்ட  வெளியினில்  நாங்கள்  - எதிர்
வேறொரு  காட்சியும்  கண்டோம்.

குட்டைப்  பனைமரம்  ஒன்றும்  - எழில்
கூந்தல்  சரிந்த  தோர்  ஈந்தும்

மட்டைக்  கரங்கள்  பிணைத்தே  - இன்ப
வார்த்தைகள்  பேசிடும்  போது

கட்டுக்  கடங்கா  நகைப்பப்  - பனை
கலகல  வென்று  கொட்டிற்றே.

எட்டிய  மட்டும்  கிழக்குத்  - திசை
ஏற்றிய  எங்கள்  விழிக்குப்

பட்டது  கொஞ்சம்  வெளிச்சம்  -அன்று
பெளர்ணமி  என்பதும்  கண்டோம்.

வட்டக்  குளிர்  மதி  எங்கே  - என்று
வரவு  நோக்கி  யிருந்தோம்.

ஒட்டக  மேல்  அரசன்  போல்  - மதி
ஓர்  மரத்  தண்டையில்  தோன்றும்-

முத்துச்  சுடர்  முகம்  ஏனோ  -  இன்று
முற்றும்  சிவந்தது  சொல்வாய்.

இத்தணை  கோபம்  நிலாவே  - உனக்கு
ஏற்றிய  தார்  என்று  கேட்டோம்.

உத்தர  மாகஎம்  நெஞ்சில்  - மதி
ஒன்று  புகன்றது  கண்டீர்.

சித்தம்  துடித்தது  நாங்கள்  - பின்னால்
திரும்பிப்  பார்த்திட்ட  போது.

தோணிக்  கயிற்றினை  ஓர்  ஆள்  - இரு
தோள்  கொண்டிழுப்பது  கண்டோம்.

காணச் சகித்திடவில்லை  - அவன்
கரையோடு  நடந்திடுகின்றான்.

கோணி  முதுகினைக்  கையால்
கோல்  நுனி  யால்  மலை  போன்ற

தோணியை  வேறொருவந்தான்  - தள்ளித்
தொல்லை  யுற்றான்  பின்  புறத்தில்

இந்த  உலகினில்  யாரும்  - நல்
இன்ப மெனும்  கரை  யேறல்

சந்தமும்  தொழிலாளர்  -புயம்
தரும்  துணையன்றி வேறே

எந்த  விதத்திலும்  இல்லை  - இதை
இருபது  தரம்  சொன்னோம்.

சிந்தை  களித்த  நிலாவும்  - முத்துச்
சிந்தொளி  சிந்தி  உயர்ந்தான்.

நீல  உடையினைப்  போர்த்தே  - அங்கு
நின்றிருந்தாள்  உயர்  விண்ணாள்.

வாலிப  வெண்மதி  கண்டான்  - முத்து
மாலையைக்  கையிலிழுத்து

நாலு  புறத்திலும்  சிந்தி  - ஒளி
நட்சத்திரக்  குப்பையாக்கிப்

பாலுடல்  மறையக்  காலை  - நாங்கள்
பலிபுரக்  கரை  சேர்ந்தோம்.

பாரதிதாசன்

தொகுப்பு

டாக்டர்.தொ.பரமசிவன்

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

சென்னை- 600 098  26359906, 26251968


 

செவ்வாய்க்கு விண்கலம்  அனுப்ப நம்மால் முடியும்.
பக்கிங்காம்  கால்வாயைப் பயன்படுத்த  முடியவில்லை.
இதை விதி என்பதா?  அல்லது  சதி  என்பதா ?




Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments: