முன்னைப் போலத் தமிழ் இனம்
இன்னல் துயரம் யாவும் நீங்கித்
தன்னை தானே ஆள வேண்டும்
அதுதான் என்ஆசை !
மின்னைப் போலக் கதிரைப் போல
அன்னைத் தமிழ்த் தாய்மொழி. இம்
மண்ணை ஆட்சி செய்ய வேண்டும் !
இதுதான் உள்ஓசை!
உலகம் முழுதும் அலைந்து சாகும்
இலக்கை இழந்த தமிழர், தமிழ்
நிலத்தில் வந்து வாழ வேண்டும்!
அதுதான் என்நோக்கம்!
புலத்தை மீட்டுப் புன்மை தவிர்த்துக்
குலத்தில் தமிழர் ஒன்றே என்னும்
இலக்கை மீண்டும் அடைய வேண்டும் !
இதுதான் என்ஆக்கம்!
ஊரும் பேரும் உலகம் போற்ற
தாரும் நிலமும் தமிழர் தாங்க
ஏரும் நீரும் செழிக்க வேண்டும்
அதுதான் என்வேண்டல்!
தூரும் தும்பும் கசடும் நீக்கி
வேறும் அன்பும் மனதில் ஊறக்
கூறும் நலன்கள் குவித்தல் வேண்டும்
இதுதான் என்தூண்டல்!
பாவலரேறு -1985
0 comments:
Post a Comment