பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஒவ்வோர் உடம்பும்
ஒவ்வோர் உலகம் !
ஒவ்வோர் உடம்பிலும்
உள்ளியங்(கு) உயிர்தான்
உலகினில் உள்ள
இயற்கையை ஒத்ததாம்!
அலகிலா அணுக்களே
அனைத்துலக உயிரினம் !
மண்டுதசை எலும்பெலாம்
மண்ணும் மலைகளும் !
அண்டுசளி, கோழை
அடுபனி, குளிர்நிலை !
கடல்போல் அரத்தம்
கனப்பே நெருப்பு !
உடலிடை ஓடும்
உயிர்ப்புவளி காற்று !
மூளை, ஆ காயம்
மூண்டறிவு இறைமை !
ஈளையும் காய்ச்சலும்
எழுகுளிர், கோடை !
நம்முடல் உலகினை
நல்லாட்சி செய்திடும்
நம்மின் ‘நான்’ உணர்வே
நாடாளும் அரசனாம் !
அரசன் எவ்வழி
அவ்வழி குடிகள்போல்
இருக்கும்’நான்’ உணர்வே
இயல்பாய் இயங்கினால்.
உடல், உலகு ஆட்சி
ஒழுங்குற நடந்திடும் !
உடலுறுப் பனைத்தும்
ஒத்துழைத் தியங்கும் !
இருக்கும் ‘நான்’ உணர்வே
இறுமாப்பின் இயங்கினால்
செருக்கு மிகுந் தாட்சி
சீர்கெட்டுப் போகும் !
உடம்பின் பூதங்கள்
ஒவ்வொன்றும் நலமுடன்
திடம்பெற அமைதலே
முதன்முதல் தேவையாம் !
அவரவர் உடம்பை
ஆளப் பழகலே
எவர்க்கும் இயற்கை
ஈந்த வாழ்க்கையாம்!
அறிவெனும் இறைமைத்
துணையுடன் மாந்தச்
செறிவெனும் நன்மனம்
சீர்மையோ டியங்குதல்
உடலுலக ஆட்சி
நடைபெற உதவிடும் !
கடனிதாம் எவர்க்கும்;
கடமை தவ றாதீர்! - 1989
----------------------------------------------------------------------------------
கனிச்சாறு - தொகுதி -6 -காதல், இயற்கை, இறைமை
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்
-------------------------------------------------------------------------------------
தென்மொழி பதிப்பகம், மேடவாக்கம் கூட்டுச்சாலை,
மேடவாக்கம், சென்னை - 600 100
-------------------------------------------------------------------------------------
94444 40449
0 comments:
Post a Comment