எண்சீர் விருத்தம்
அசுரர் என்று தமிழர்களை, ஆரியர்கள்
அழைத்தார்கள்; சுரர் என்று தம்மைச் சொன்னார்
பசிகொண்ட நரி போலே ஆரியர்கள்
பழந்தமிழர் தமையணுகி, வயிற்றைக் காட்டி
இசைந்தவர்பால் கூத்தாடி, இனத்தைக் கூட்டி
இடம் பெற்றுக் கலாம் விளைத்துக் குடித்தனத்தை
வசம்பார்த்துப் பெரிதாக்கி வைத்த பின்னர்
வளநாட்டில் ஆதிக்கம் பெற நினைத்தார்.
செங்கதிரை நாழிகைகள், மேற்கில் தள்ளும்
செயல் போலே, ஆரியர்கள், தமிழர் வாழ்வில்
பொங்குதமிழ்க் கலைச்செல்வம் மறையும் வண்ணம்
புனைசுருட்டுச் செய்து வந்தார்; ஐயகோ நம்
மங்காத தமிழ் மறவர் வரலாறெல்லாம்
மங்கும் வகை செய்தார்கள்; வையங் கண்ட
தங்கத்தை இரும்பென்று சொன்னார்; ஐயோ
தமிழரலெல்லாம் அசுரர்கள் ! தாம்சு ரர்கள் !
அரக்கரென்றார்; அசுரர் என்றார்; நம்மையெல்லாம்
அழகற்ரோர் ஒழுக்கமிலார், என வரைந்தார்
சுரக்கவில்லை மலையருவி ! உணர்ச்சி வெள்ளம்
தோன்றவில்லை நெஞ்சத்தில் நம்மை மறந்தோம்
குரங்கி னங்கள் என்றுரைத்தார், நம்மை யெல்லாம்
குறுங்கரடிக் கூட்டமென்றார் கேட்டி ருந்தோம்
அரிக்கின்ற செல், அழிக்க மறந்த தோள்கள்,
அன்று போல் இன்றுமுண்டு குன்றத் தைப்போல்.
வாலியின் பால் வஞ்சகத்தைச் செய்த ராமன்
வாலிக்கு மோட்சத்தை அருள் செய் தானாம் !
கோலைத்தன் வசமாக்கச் சதையை விற்ற
கொடியவன்பேர் ஆழ்வானாம் ! உடன் பிறந்தீர்,
கேலி யொன்று கேட்டீரோ, நரகன் என்போன்,
கீழ்ச் செயல்கள் செய்தானாம், சுரர்கட் கெல்லாம்
ஏலாத செயல் செய்த பாவி யாம், அவ்
விந்திரனின் ஆட்சியையும், பறித்ததுண்டாம்.
பெண்ணினத்தைக் கொல்லாமை கடைப் பிடித்த
பெரியானை, நரகன் எனும் தமிழ்ச் சேயைப்
பெண்டாட்டி தனையனுப்பி, மானமின்றிப்
பெருவெற்றி கிழித்தாராம் கண்ண வீரர்,
பண்டிகையாம் ! தீவாளி அந்த நாளாம் !
பல்லக்கை வழிகூட்டி அனுப்பு கின்ற
பெண்டுக்குப் போடுதல் போல் கழுத்துக் கோடி
பெரிது பெரி தாய் வாங்கிப் படைய லிட்டே.
அணிந்திடவும் வேண்டுமாம், அந்த நாளில் !
அக மகிழ வேண்டுமாம். அதுவுமின்றித்
தணியாத மகிழ்ச்சிதனை, அறிவை அந் நாள்
தலைமுழுக வேண்டுமாம்; தமிழர் மானம்
தணல் பட்டுப் படபடென வெடிகொளுத்த வேண்டுமாம்; இப்
பணி யிட்டோர் ஆரியர்கள் தமிழர் என்னும்
பண்டிதர்கள் இவற்றிற்குக் கவிதை செய்தார்.
இனமழிப்பார் அடிசுமக்கும் படிச் சுவர்கள்
இனமழிப்பார் அடிசுமப்பார் படிச்சவர்கள் !
கன லென்று நடுங்கினரோ ? நம்மினத்தைக்
கசந்தாரோ ? வற்ரியதோர் ஓலையைப் போல்
மனம் சுருண்டு போனாரோ ? தம்மைத் தாமே
மறந்தாரோ, ஐயகோ தமிழர் தம்முன்
முன மிருந்தார் சிலகம்பர்: விட்டதாலே
முளத்தகம் பக்கிளைகள் மும்ம டங்கோ ?
பாரதிதாசன் பாடல்கள்
தொகுப்பு:
டாக்டர் தொ.பரமசிவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
சென்னை- 600 098
-----------------------------------------
26359906, 26251968
0 comments:
Post a Comment