புகழ்எனக்குப் பொருட்டில்லை; நோக்கமில்லை:
பெருமையில்லை; பொருளும் இல்லை !
இகழ் எனக்குத் தாக்கமில்லை; துன்பமில்லை;
இழிவில்லை; இழப்பும் இல்லை !
திகழ்தமிழின் இனம்நாட்டின் பெருமையெல்லாம்
தேய்ந்தழிந்த உரிமை எல்லாம்
அகழ்வெடுக்கும் முயற்சியிலே இழிவெனினும்
அழிவெனினும் அனைத்தும் ஒன்றே !
துன்பம்எனைத் தொளைப்பதில்லை; அரிப்பதில்லை;
தொய்வடையச் செய்வ தில்லை!
இன்பமெனக் கினிப்பதில்லை; உவப்பதில்லை;
ஏக்கழுத்தும் செருக்கும் இல்லை !
அன்புறுநம் செந்தமிழுக்கும் இனத்திற்கும்
நாட்டிற்கும் உழைக்கும் என்னைத்
தென்புறுத்தும் நல்லுணர்வில் மூழ்கிவிட்ட
திளைப்பினிலே எவையும் ஒன்றே !
சிறையெனக்குத் துன்பமில்லை; கொடுமையில்லை;
சிறிதுமெனைச் சிதைப் பதில்லை !
நிறைபணியால் சோர்வதில்லை; சலிப்பதில்லை;
நேர்மைநிலை குறைவ தில்லை !
குறைவறுநம் தூய்தமிழ்க்கும் மக்கட்கும்
நாட்டிற்கும் தொண்டு செய்தே
மறைவுறுநம் பெருமைகளை, உரிமைகளை
மலர்த்துகையில் அனைத்தும் ஒன்றே. 1994
கனிச்சாறு -ஏழாம் தொகுதி
தென்மொழி பதிப்பகம்
செந்தமிழ் அடுக்ககம்
(சி.கே.அடுக்ககம் (
மேடவாக்கம் கூட்டுச்சாலை
மேடவாக்கம், சென்னை - 600 100
-----------------------------------------
94444 40449
0 comments:
Post a Comment