தமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொன்மைச் சிறப்புமிக்க தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் இசைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், பதிவு செய்யப்பட்ட கலைக் குழுவுக்கு தலா ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
கலைக் குழுக்கள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு, பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கலைக் குழுக்களின் பதிவுச் சான்று நகல், 3 ஆண்டுகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள்-கலைக் குழுக்கள் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். "உறுப்பினர்-செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பி.எஸ்.குமாரசாமி சாலை, சென்னை-28' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என இயல், இசை நாடக மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
தன்விவரக் குறிப்புகள்: தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற வலைதளத்தில் இசை, நாட்டியம், கிராமியக் கலைகள் ஆகியவற்றின் நிகழ்ச்சி விவரங்களையும், கலைஞர்கள் குறித்த விவரங்களையும் உருவாக்கி சேகரிக்க உள்ளது. ஆர்வமுள்ள கலைஞர்கள், கலை நிறுவனங்கள் தங்களது விவரங்களை சி.டி.யில் குறுகிய கால அளவில் பதிவு செய்து அனுப்பலாம்.
புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரிப்பு: தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் தமிழ் இலக்கியக் காட்சிகளை மையக் கருத்தாகக் கொண்டு, புதிய வரலாறு, புராண நாடகங்களைத் தயாரிக்க நிதியுதவி வழங்கப்படும் என இயல், இசை, நாடக மன்றம் அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் வரலாற்று, புராண நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். நிதியுதவி பெற விரும்பும் நாடகங்கள், நாட்டிய-நாடகங்கள் ஏற்கெனவே மேடையேற்றம் செய்யப்படாத புதிய படைப்புகளாக இருக்க வேண்டும் என்று நாடக மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்கங்களுக்கு 044-2493 7471 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment