இன்றைய மாணாக்கர்! நாளைய தலைவர்! என்ற பாவலேறுவின் வரிகளைச் சுமந்து, நாளைய தலைவர்களை தமிழ் உணர்வோடு தமிழகத்தைக் நல்வழியில் காத்திட வேண்டும் என்ற எதிர்கால இலக்கோடு தமிழகப் பெண்கள் செயற்களத்தால் நடத்தப்படுவது தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி. இக்கண்காட்சி பெண்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுவது சிறப்பிற்குரியது.
அத்தகைய சிறப்பிற்குரிய தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியின் 8ஆம் ஆண்டு நிகழ்வு கடந்த 10, 11, 12 அக்டோபர் 2014 அன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள டி.எஸ்.எஸ். திருமண மாளிகையில் நடைபெற்றது. இக்கண்காட்சியை முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திருவாளர் கோ. திலகவதி இ.கா.ப. (ஐ.பி.எஸ்) அவர்கள் திறந்து வைத்தார். மேலும் அவர் தமிழகப் பெண்கள் செயற்களத்தால் தொகுக்கப்பட்ட களப்பிரர் – பல்லவர் காலம் தமிழர் வரலாறு (தொகுதி 3) நூலையும் வெளியிட.. முதற்படியை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையைச் சார்ந்த முன்னாள் கல்வெட்டாய்வாளர் முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தென்மொழி ஆசிரியர் திருவாளர் மா.பூங்குன்றன், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநருமான திருவாளர் மு.சமுத்திரகனி, டிஎஸ்எஸ் திருமண மாளிகையின் தலைவர் திருவாளர் ஆர்.பி. மனோகரன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகப் பெண்கள் செயற்களத்தால் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான ”தமிழர் வரலாறு வினா விடைப்” போட்டியில் வெற்றியடைந்த மாணாக்கர்களைப் பாராட்டி சான்றோர்களால் பரிசு வழங்கப்பட்டது. அதன்படி முதல் பரிசு உரூ. 25,000/-த்தினை பி.வி.எம். குளோபல் பள்ளி மாணாக்கர் செ.அழகம்மையும்.. இரண்டாம் பரிசு 15,000/-த்தினை அர்ச்சனாவும்.. மூன்றாம் பரிசு சோதிலட்சுமி, அக்சயா ஆகிய இரண்டு மாணாகர்களுக்கும் தலா உரூ. 10,000/-த்தினையும் பெற்றனர். மேலும் 34 மாணாக்கர்களுக்கு தலா உரூ. 1000/- ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
மூன்று நாள் நடைபெற்ற இக்கண்காட்சியில் உலகம் தோன்றியது முத்ல் ஆங்கிலேயர் காலம் வரையிலான வரலாறு, 64 கலைகள், தமிழக மாவட்டச் சிறப்புகள், தமிழ் நூல்கள், இசைக் கருவிகள், தமிழர் உணவுகள், தமிழர் விளையாட்டுகள் ஆகியவை இடம்பெற்றன.
இக்கண்காட்சியை காண்பதற்கு சென்னை மாவட்டப் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் ஏறக்குறைய 10,000 பேர் பங்கேற்றனர். கண்காட்சியைப் பார்த்து முடித்து வெளியே வரும் மாணாக்கர்களிடம் கண்காட்சியில் இடம்பெற்ற செய்திகளைப் பற்றி வினாக்கள் கேட்கப்பட்டன. அதில் 5 வினாக்களுக்கு விடையளித்த பள்ளி மாணாக்கர்கள் 200 பேருக்கு உரூ. 200 மதிப்புள்ள நூல் பரிசும்.. 10 வினாக்களுக்கு விடையளித்த 2 கல்லூரி மாணாக்கர்ர்களுக்கு உரூ. 1000/- மதிப்புள்ள கைக்கடிகாரமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இக்கண்காட்சியில் பகுதி மக்கள், தலைவர்கள், பல்வேறு இயக்கம், கட்சியைச் சார்ந்தவர்கள் ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கண்காட்சியின் இறுதி நாளில் (3ஆம் நாள்) திரைப்பட இயக்குநர் திருவாளர் வி.சேகர், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் திருவாளர் க.கலைக்கோட்டுதயம், மதிவசந்தம் நூலகத்தின் நிறுவனர் இந்துமதி வசந்தகுமார், இருப்புப்பாதை முத்தமிழ் மன்றத்தின் செயலர் திருவாளர் பின்னி ஆகியோர் பங்கேற்று மேற்கண்ட மாணாக்கர்களுக்குப் பரிசு வழங்கினர்.
ஊர்தோறும் நிகழ்த்திட வேண்டிய கண்காட்சி.
தமிழினத்தின் வரலாற்றைப் பரப்பிடல் ஒவ்வோர் தமிழனின் கடமை.
பாராட்டுக்குரியோர் :- தமிழகப் பெண்கள் செயற்களம்
தொடர்பிற்கும், உதவிக்கும் :- ESAIMOZHI – seerthi@hotmail.com
0 comments:
Post a Comment