உத்தரப் பிரதேசத்தில் சுப்பிரமணிய பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்குவதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழுக்காக குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அவர், நேற்று முன்தினம் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இதுதொடர்பாக மனு ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
வாரணாசியில், கங்கை நதிக் கரையில் உள்ள கேதார்காட் பகுதியில் பாரதியாரின் அத்தை வாழ்ந்த வீடு உள்ளது. பாரதியாரின் தந்தை இறந்த பிறகு, அத்தை ருக்மணி அம்மாள் அவரை வாரணாசிக்கு அழைத்து வந்து விட்டார். இங்கு தனது அத்தையுடன் சுமார் ஆறு ஆண்டு காலம் வாழ்ந்த பாரதியாருக்கு, சுதந்திரப் போராட்ட உணர்வு இங்குதான் முதன்முறையாகப் பிறந்ததாகக் கருதப்படுகிறது. எனவே பாரதியார் வசித்த இந்த வீட்டை தேசிய நினைவு சின்னமாக்குவதற்கான முயற்சியில் உத்தராகண்ட் பாஜக எம்பியான தருண் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் தருண் விஜய் கூறியதாவது:
பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி அவரது சிலைக்கு மாலை அணி விக்கச் செல்வதற்கு முன்பு, அவர் வசித்த வாரணாசி வீடு மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படாமல் இருப்பதை ‘தி இந்து’ சுட்டிக்காட்டியபோது அதிர்ந்தேன். இதற்காக மத்திய அமைச்சர் நாயக்கை சந்தித்துப் மனு கொடுத் துள்ளேன். அவர் அந்த வீட்டை நேரில் வந்து பார்க்க சம்மதித்துள் ளார். தற்போதுள்ள விதிகளின்படி வீட்டை தேசிய மயமாக்குவது குறித்து பரீசீலனை செய்வதாகவும் உறுதி கூறியுள்ளார்.
வாரணாசி தொகுதிக்கு பொறுப் பாளராக இருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவைவும் அழைத் துச் சென்று காண்பிக்க திட்டமிட்டுள் ளேன் என தெரிவித்தார்.
சிவ மடம்
வட இந்தியர்கள் மத்தியில் சிவ மடம் எனும் பெயரில் அறியப்படும் அந்த வீட்டில், பாரதியாரின் 86 வயது பேரன் கே.வி.கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனுள் சித்தேஸ்வரர் கோயிலும் உள்ளது. இது வாரணா சிக்கு வரும் தமிழர்கள் தவறாமல் பார்வையிடும் இடமாகவும் அமைந்துள்ளது.
நன்றி : தி இந்து
அய்யா வணக்கம். திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைத்தள வரிசையில் தங்கள் தளம் பார்த்து வந்தேன். இணையத்தில் நல்லதமிழில் பண்பாடு பற்றிய அக்கறையோடு வரும் உங்கள் தளத்தின் தமிழ்ப்பணி வளர்க. வணக்கம்.
ReplyDelete