உலகைத் தொடர்பு கொள்ள ஆங்கிலம் அல்லாத உலகப் பொது மொழி வேண்டும் என்று காங்கிரஸின் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து குமரி அனந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அழிவின் விளிம்பில் நிற்கும் நூறு மொழிகளில் 8-ஆவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. இது வருந்தத்தக்க விஷயமாகும்.
தமிழ் வழிக் கல்வியின் மூலம் தமிழ் என்றும் நின்று நிலைக்கும். தாய்மொழி மூலம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் உலகத்தோடுத் தொடர்பு கொள்ள உலகப் பொது மொழி தேவை. பிரான்ஸ், ஜெர்மனி, சோவியத் யூனியன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் அவரவர் மொழியிலேயே விளக்கங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நாடுகளைச் சேர்ந்த எவருமே ஆங்கிலத்தை உலகப் பொது மொழி என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்புக்கு உலகப் பொது மொழியை உருவாக்க முன்வர வேண்டும் என 1992-ஆம் ஆண்டு கடிதம் எழுதினேன். இதற்கு பதிலளித்த அந்த அமைப்பு, "பொது மொழி குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையே முடிவு செய்ய முடியும். இதனை ஐ.நா. சபையின் உறுப்பு நாடு வரைவுத் தீர்மானமாக அனுப்பி வைத்தால் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதை ஆராய்ந்து முடிவெடுக்கும்' என பதிலளித்தது. இதுகுறித்து இந்தியா ஒரு வரைவுத் தீர்மானத்தை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாய்மொழியையும், உலகப் பொது மொழியையும் மக்கள் அனைவரும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமணி
0 comments:
Post a Comment