தமிழ் இணைய கல்விக் கழகத்தில் கணினித் தமிழ் ஆய்வுக் கூடம், தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி முறை மூலம் அவற்றைத் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தகவல் தொழில்நுட்பவியல் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி இணையம் வழியாக தமிழ் மொழியைப் பரப்புவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழி கற்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ் மொழியின் அடிப்படை ஆராய்ச்சிக்காகவும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசால் தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கென அந்த நிறுவனத்தின் கணினித் தமிழ் ஆய்வுக் கூடத்தில் ரூ.20 லட்சத்தில் கணிப்பொறி, இணையதள வசதி, குளிர்சாதன வசதியுடன் கூடிய 24 பணிக்கூடங்கள் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், நூலகம், சேவையக அறை, 13 அறைகளில் குளிர்சாதன வசதி, இணைய வசதியுடன் கூடிய நவீன கணிப் பொறிகள் கொண்ட தமிழ் மென்பொருள் உருவாக்க மையம், தமிழ் இணையக் கல்விக் கழக கலையரங்கத்தில் கல்வித் திட்டங்கள் தொடர்பான கூட்டங்களை நடத்துவதற்கான கலையரங்கத்தையும் அவர் திறந்தார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் அதன் பாடத் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், இணைய வகுப்பறைப் பாடங்களை ஒளிப்பதிவு செய்வதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒலி, ஒளி அமைப்பு கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்தையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment