கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்துஸ்துக்கு கீழ் உள்ள ஓட்டல்களில் மதுக்கூடங்களை மூடும் முடிவில் மாற்றமில்லை என்று அந்த மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மதுக்கூடங்களை மூடுவது குறித்து, மாநில அமைச்சரவையில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
கேரள மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மது அருந்துவதற்காக மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தின் இயற்கை அழகை ரசிப்பதற்காக வருகிறார்கள்.
எனவே, இந்த முடிவால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படாது.
இது, கேரள அரசு அவசர கதியில் எடுத்த முடிவு அல்ல. கேரளத்தில் மதுவால் ஏற்படும் சமூக பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அனில் குமார் கூறினார்.
முன்னதாக, கேரள சுற்றுலாத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் இ.எம்.நஜீப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரள அரசின் புதிய மதுபானக் கொள்கையால், சுற்றுலாத் துறை கடுமையாக பாதிப்படையும். எனவே, சுற்றுலாத் துறையை பாதிக்காத வகையில் புதிய மதுபானக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகளை மூடினால், வார இறுதி நாள்களில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்படும் கூட்டங்கள், மாநாடு ஆகியவை பாதிப்படையும் என்று நஜீப் கூறினார்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யும் வகையில் மதுக்கூடங்களுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேரள சுற்றுலா வர்த்தக கண்காட்சியின் தலைவர் ஆப்ரஹாம் ஜார்ஜ் கோரிக்கை விடுத்தார்.
கேரள மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தும் முடிவில் இரு கட்டமாக, ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஓட்டல்களில் மதுக்கூடங்கள் இயங்குவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மதுக்கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்மாத இறுதிவரை மதுக்கூடங்கள் இயங்க அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுக்கூடங்களை மூடுவது குறித்து முடிவெடுக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினமணி
0 comments:
Post a Comment