சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுடன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெய். உடன், ஐஸ்வர்யா அறக்கட்டளையின் அறங்காவலர் சித்ரா விஸ்வநாதன், "காக்னிசன்ட்' அறக்கட்டளையின் இயக்குநர் என்.ஆர்.கிருஷ்ணன், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய நோய் துறை இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநில மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கே.வி.ராமன் உள்ளிட்டோர்.
பிறவி இருதயக் கோளாறுகளை நவீன கருவிகள் மூலம் குழந்தை கருவுற்ற 4-ஆவது மாதத்திலேயே கண்டுபிடிக்கலாம் என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய நோய்த் துறை இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் பிறக்கும்போதே இருதய குறைபாடுள்ள 700 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததை கொண்டாடும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் ஒத்துழைப்போடு ஐஸ்வர்யா அறக்கட்டளை கொண்டாடியது. இதில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் பேசியது:
பிறவி இருதயக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால் முழுமையாக சரிசெய்ய முடியும். "எகோ கார்டியோகிராபி' போன்ற நவீன முறைகளின் மூலம் கருப்பையில் உள்ள குழந்தையின் இருதயத்திலுள்ள குறைபாடுகளை கருவுற்ற 4-ஆவது, 5-ஆவது மாதத்தில் கண்டுபிடித்து விட முடியும். குழந்தை பிறந்த 4,5 நாள்களிலும் இந்தக் குறைபாடுகளை கண்டறியலாம். இந்தக் குறைபாடுகளில் பலவற்றை மிகக் கவனமாக அணுகி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
இதில் புதுச்சேரி மாநில மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் கே.வி.ராமன், தமிழ் திரைப்பட நடிகர் ஜெய், "காக்னிசன்ட்' அறக்கட்டளையின் இயக்குநர் என்.ஆர்.கிருஷ்ணன், ஐஸ்வர்யா அறக்கட்டளையின் அறங்காவலர் சித்ரா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமணி
0 comments:
Post a Comment