பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

சுப்பிரமணியர் பேரில் சிந்து - ஆசிரியர் பெயர் தெரியவில்லை




ஆனந்தக் களிப்பு

சீர்பெருகு சந்தவரை மேவும் பழனிச்
சேவற் கொடியோன்மேல் சிந்துபோல் பாடக்

1. சந்தவரை - அழகு பொருந்திய மலை
1

கார்பெருகு தந்திமுகத் தையன் - செந்தில்
கடற்கரை ஆண்டிமேல் தமிழை நான் பாட

2. கார்பெருகு - கருணை மதம் பெருகு
தந்திமுகம் - அத்திமுகம் - ஆனைமுகம்
செந்தில் கடற்கரை - திருச்செந்தூர்
2

தார்பெருகும் அபிராமி சொல்வாள் - அருமைச்
சந்தக் களிப்பை யான் தத்திமொழி குளற

3. தார் - மாலை
3

ஏர்பெருகும் ஆறுமுகத் தையன் - நாளும்
என்னாவில் அனுதினமும் ஆனந்த மயமாய்
4. ஏர் - அழகு
4

அத்திமுக (வேல)வனை நித்தம் தொழுவேன் - நான்முகன்
நாவுடைய மாதே மனமேவி இப்போது

5. நான்முகன் நாவுடைய மாது - நாமகள்
5

புத்திவித்தை சவுபாக்கியம் தருவாள் - நாமும்
பூலோக நாயகன் குமரன்மேல் பாட

6. புத்தி - அறிவு; வித்தை - கல்வி; சவுபாக்கியம் - மிகுந்த செல்வம்
6

சத்திஉயர் அருள் பெற்ற வேலா - என்னைத்
தயங்காமல் காக்கிறது நின்கட னய்யா
7

வெற்றி மயில் ஏறி விளையாடும் - அய்யன்
வேலவ னய்ங்கரன் பாதமலர் துணையே 8. அய்ங்கரன் - விநாயகன்
8

குற்றங்குறை தெரியாது எனத் தமிழைக்
குமரன்என் நாவில்வந் தொழுங்காகச் சொல்வாயே
9

பத்தனைக் காக்கும் குறவள்ளி - ஏழையேன்
பாடுதற் கருள்தல் நின்கடன் தாயே
10

ஆறுகுற்றம் நூறுபிழை செய்யும் - அடிமை
யறியாக் குழந்தைமேல் அன்புசெய் தருள்வாய்
11

தேறுவேன் அபிராமி செயலால் - ஒரு
சிங்கார மாலைபோல் ஆனந்தக் களிப்பை*

12. தேறுவேன் - தௌிவேன்
*ஆனந்தக் களிப்பை - ஆனந்தக் களிப்பாய் எனவும்படும்
12

கூறுவேன் உனதுடைய நாமம் - எனக்குக்
குறையொன்று வாராமல் குமரநீ காப்பாய்
13

ஏறுமயில் மீதேறி மாலைக் கிப்போ
யிதுவேளை காப்பது நின்கட னய்யா
14

சூராதி சூரனை வெறுத்த - சிவ
சுப்பிரமணியர் அருள்பெற்று நான்தொழுவேன்
15

ஆராத கானங் கடந்தய்யன்* - ஞான
ஆறுமுகத் தையன்உன் தரிசனம் பெறவே

16. ஆராத கானம் கடந்து - அரிய வழி கடந்து
`ஆறாறு காதம் கடந்து' எனவும் பொருந்தும்
* ஆறாத நாமம் கடந்தய்யன் என்பது மூல வடிவம்
16

உபாங்கமுடன் காவடி எடுத்து அன்பர்
போற்றியே வேலருட* பாதமே துதித்து

17. உபாங்கம் - துணை (பக்க வாத்தியம்)
* வேலருடைய என்பதன் சிதைந்த வடிவம்
17

கைவேலு வட்டமிட் டாடச் - செந்தூர்க்
காவடிகள் இருகோடி சூழ்ந்து விளையாட
18

குயில்கூவ மயிலும் கூத்தாட - சாமி
குமரகுரு பரமுருக அரகர என்றாட
19

ஆண்டிமக னாண்டிகும ராண்டி - எங்கள்
ஆறுமுக வேலரென வந்த குமராண்டி

20. ஆண்டிமகன் - பிட்சாடனப் பெருமானாகிய சிவன்மகன்
குமராண்டி - ஆண்டிக் கோலம் கொண்ட முருகன்
20

தாண்டி மயி லேறிவரு வாண்டி - கிழவன்
தானாவே உருவெடுத்து வருவாண்டி
21

வேண்டிய கானவர்கள் வரவே - குமரன்
வேங்கைமர மாகவே நின்றவடி வாண்டி

22. கானவர்கள் - குறவர்
22

பாண்டிக் குறவருட மகளை - நித்தம்
பட்சமுட னிச்சித்து வந்தகும ராண்டி

23. பாண்டிக்குறவர் - பாண்டிய நாட்டுக் குறவர்
பட்சம் - அன்பு; இச்சித்து - விரும்பி
23

கைதனில்வே லாயுத மெடுத்து - நல்ல
கனகமணி ரத்தினத் தேரின்மே லேறி
24

எய்ததொரு சூரனையும் குத்தி - அவனை
இருபிளவு செய்துமே வாகனம தாக்கி
25

செய்ததவ முனிவோர்கள் தேவர் - தம்மைச்
சிறைவிடுத் தேதெய்வ லோகமீ தேற்றி

26. செய்ததவ முனிவோர்கள் - தவம் செய்த முனிவர்கள்
26

அய்வர் சகாயன் மருகன் - அனங்கர்*
ஆறுமுக வேலவரை வந்து தொழு தேத்தி

27. அய்வர் சகாயன் மருகன் - மால் மருகன்
அனங்கர் - கடவுள்
* அணங்கார் எனவும் பாடம் ஆயின் 'விழா அயரும்',
'வெறியாடுகின்ற' என்பது பொருளாகக் கொள்ளலாம்
27

பாருங்கோ பூலோகம் வாழும் - இந்தப்
பார்புகழும் வேந்தரே செந்தூர் நகரில்
28

வாருங்கோ ஒருமனது கொண்டு எங்கள்
வடிவேலர் பாதமதை வாழ்த்துங்கோ நின்று

29. ஒரு மனது - அலையாத ஒரு முகமான நினைவு
29

கலகலென வருதண்டைக் காலா - உக்கிர
காளிதிரி சூலிகவு மாரிபெறு பாலா

30. கலகலென - தண்டையின் ஒலிக் குறிப்பு
உக்கிரகாளி - கோபமிகுந்த காளி
திரிசூலி - சூலப்படையுடையாள்; கவுமாரி - பார்வதி
30

பலபல யோசனைசெய் யாமல் - எந்தன்
பவ வினையைத் தீர்ப்பதுவும் பழனிமலை யானே
31

ஆங்கார ஓங்கார சக்தியம்மாள் - தேவி
அம்மையுமை பங்கில்வளர் சிவனுடைய சத்தி

32. ஆங்கார ஒங்கார சத்தி - வெற்றிப் பெருமிதம் உடைய
ஒங்கார வடிவினளான சத்தி
32

வாங்காத காவடிகள் கட்டி - நல்
வையாபுரி சுற்றி வாரா னிடும்பன்

33. வாங்காத - வளையாத
வையாபுரி - பழனி
33

மருவும் மருக்கொழுந்தும் - வகையாய்
மாலை புனைந்து மரகதரூப மயி லேறியே

34. மரு, மருக்கொழுந்து - நறுமணப்பூண்டு
மரகத ரூப மயில் - பச்சை வண்ணம் உடைய மயில்
34

பயின்றரக்கன் சூரர் பகை தீரவே
திருவும் நிறைந்த தலம் திருப்பரங் குன்றில் மாடத்
தெருவில் பவனி வார தாரய்யா
35

அறுமுகன் பன்னிருகை அயில் கொண்டு
அசுரரைமுன் சமர்செயும் குமரரிவர் தானடி
36

சோலைகளும் கன ஆலயமும் திகழ்
சோபித சம்பிரமம் மீறிய செந்தினில் வேலன்மேல்*

37. சோபித சம்பிரமம் மீறிய - அழகும் களிப்பும் மிகுந்த
* இத்தொடர் அமைப்பு பொருள் விளங்கவில்லை
37

வாலிபர் அன்பொடு பாடிய சிந்தையில் ஆசைகள்
சிந்துகளவே மனதின்புற நானுமே
38

உத்தள வெண்ணீறணிந்து எத்திசை எங்கும் விளங்க
வித்தார பவனி வந்த தாரய்யா

39. உத்தள வெண்ணீறு - நீரில் குழையாது
உத்தூளனமாகப் பூசப்பட்ட வெண்ணீறு
வித்தாரப்பவனி - வித்தாரம் - விரிவு - பெரும்பவனி
39

சத்திவே லெடுத்துரண சுத்தவீரரைச் செயித்த
சண்முக முத்தையர் இவர் தாண்டி
40

சுத்தி விளையாட வென்றே இத்திசை தனிலே வந்து
அத்திதட மத்தகமீ தேறியே

41. அத்தி - யானை
41

சித்து விளையாட என்றே இத்திசை தனிலே வந்த
சேவகப் பெருமாள் இவர் தாண்டி

42. சேவகப் பெருமாள் - வீரனாகிய குமரன்
விசாகன் - குமரன் (திவாகரம் 1- 4)
42

சூரர்முகங் கிரியூடுருவும் படி வேல்விடு செங்கை விசாகன் அலங்
காரத் தோகை யிலங்கு மயூர துரங்கை வேலனே


43. மயூரதுரங்கன் - மயிலூர்தி (துரங்கம் - குதிரை - இது
ஆகுபெயராய் ஊர்தியைக் குறித்தது)
43

பதக்கஞ் சரப்பணியோன் பணிகள்
பருதிஒளி போல வாரதிவ ராரய்யா
44

கதிக்குங் கதலிகன்னல் நிறுத்தி மலர்தூக்கி
கனகரதம் ஏறியவர் தாண்டி
45

தாளந் தவில்முரசு தம்பட்ட மேளமொடு
சங்கீத ராகமுடன் வாரதிவ ராரய்யா

46. தாளம், தவில், முரசு, தம்பட்டம் - இசைக்கருவிகள்
46

வேழஞ் சரவணைகள் கண்டு பயின்றதொரு
வேலேறும் பவனி இவர் தானடி

47. வேழஞ் சரவணை - நானல் சூழ்ந்த சரவணப் பொய்கை
வேழஞ் சருளணைகள் - என்பது மூல வடிவம்
47

வள்ளிக் குறமக ளுள்ளபடி தினை
தெள்ளிச் சிறுதேனை வெல்லப் பொடிதனை
வாங்கியுண்ட காங்கையன் விசாகனே
கள்ளத் தனமுட னுள்ளத் தினில்மிகு

48. காங்கேயன் - முருகன் (கங்கை...கொண்டு சென்று
சரவணத்திடுதலால் பெற்ற பெயர். கந்த-திரு-16)
விசாகன் - குமரன் (கந்த-திருவிளை-60)
48

வள்ளிப் பெண்தனை மெள்ளத் திருடின
காங்கையன் சுப்பிரமணியர் தானடி
49

உத்த(ர) சிவகிரியில் நித்தம் குழந்தை வடி
வுகந்து குடியிருப்ப தாரய்யா


50. உத்தசிவகிரி - புகழுரை மிகுந்த சிவகிரி
உத்தரசிவகிரி - வடக்கில் உள்ள சிவகிரி எனலுமாம்
50

சுத்தி உலகமெங்கும் வெற்றிமயி லேறிவரும்
சுப்பிர மணிய வேலரிவர் தானடி
51

சென்னியில் கிரீடமின்ன செங்கையில் வேலிலங்க
திட்டமுடன் வார துரை ஆரய்யா

52. சென்னி - திருமுடி
52

சொன்னவடி வேலெடுத்து சூரனைச் சங்காரம் செய்யும்
சுப்பிர மணிய வேலரிவர் தாண்டி - எங்கள்

53. சொன்ன - சொர்ண - பொன்
53

திங்கள் துலங்கு முகத்தில் சேர்ந்த கத்தூரித்
திலகம் தீட்டிமிக வாரதுரை ஆரய்யா
54

மையல்கொண்டு வேலர்குற மாதைத் தேடியே - கந்தன்
மானிடர் வடிவு கொண்டு பாதை கூடியே - தெய்வ

55. மையல் - மயக்கம்
55

நாரதனே கூடச்சேர்ந்து வாவென்றே - கந்தன்
சீக்கிரம் குறப்பென்னாளைப் பார்க்கவே சென்று
56

வில்லெடுத்து அம்புதொட்டு வேடர் போலவே - கந்த
வேலவர் வனத்தைத் தேடி மிஞ்சி ஏலவே

57. மிஞ்சி - மிக, கடந்து; ஏல - பொருந்த
57

செல்லவழி கேட்டுத் திசை நாடியே - கந்தன்
சீக்கிரம் குறப்பெண்ணாளைப் பார்க்கவே - சென்று
58

கண்களுக் கெட்டாத தினைக் காடு தூரமோ - மெய்யா
கந்தன் வள்ளியைக் காண்ப தெந்த நேரமோ
59

தன்தினைப் புனமும் வள்ளித் தலமு மெதுவோ - வள்ளி
தன்னைக் காண்ப தெக்காலமோ சமயம் என்றைக்கோ
60

தூரவோ கிட்டவோ லக்குச் சொல்லு மெனக்கே - அந்தத்
தோகைதன்னைக் காண்பித்தால் சுகிர்த முண்டுனக்கு நாரதா

61. லக்கு - திசை, நெல்லை வட்டார வழக்கு
தோகை - மயில் போன்றவர்; சுகிர்தம் - நன்மை
61

வாவென்றே வேலா நண்ணி நடந்தார் - அந்த
நாகமலைக் கப்புறத்தில் நண்ணி நடந்தார்
62

வெள்ளிமலை தங்கமலை விந்தைமலை உண்டு - அங்கே
விரைகமழும் சந்தனச்சோலை வேலரது கண்டு

63. விரை - நறுமணம்
63

கிள்ளையும் குயிலன்னமும் கிளைபெருக்கவே - வேலர்
கேள்வியால் வள்ளிஎன்றதைக் கேட்டுக் கூவவே
64

தோகை வள்ளி கவணோசை தொடர்ந்துள்ளங் குளிர்ந்தார்-வேலர்
சோலைப் பெண்ணா ளோல மென்றது தோணிச்சே
65

வியாயந்தார் வாசாயத் தினைப்புனமும் வளமும் காண்கின்றார்-வேலர்
வள்ளியின் வடிவு கண்டு வந்தெதிர் நின்றார்
66

எந்தஊர் காணீர் எந்தத் தேசம் இப்பம்*
எனக் கறிய வகை வகையாய் விள்ளுவீரே நேசம்

67. விள்ளுவீர் - சொல்லுவீர்
*இப்பம் - இப்பவும் என்பதன் குமரி மாவட்டப் பேச்சு வழக்கு
67

தென்கழுகு மாமலை எந்த னூரு - யானும்
சிவலிங்கச் செட்டி மகன் கந்தனெனப் பேரு
68

சொந்தமுடன் இந்தவழி வந்து யானும்
தோகைமயில் கொண்டு இந்தப் பூமியில் வந்தேன்
69

வந்தவகை எந்தனுடன் சொல்லும் - நீரும்
வம்பு தும்பு பேசாமல் மரத்தடியில் நில்லும்

70. வம்பு - வம்புத்தனம், நேரின்மை, வஞ்சனை
தும்பு - அநாகரிக வார்த்தை
70

கண்டு கொண்டார் வேலவரும் - வள்ளி
கட்டழகி தன்னழகி செண்டுமுகில் மாதரசே வள்ளி

71. செண்டு - பூச்செண்டு
71

எந்தவூரு தேசமெதோ நாமறியோம் - இவள்
எவருபெற்ற பெண்மயிலோ நாமறியோம்
72

அந்தரமாய் வனந்தனிலே ஒரு ஆளுமில்லாக் கானகத்தின்
சுந்தரியோ லட்சுமியோ தோகையிள மாமயிலோ
மந்திரஞ்சேர் கயிலைமலை யிவள் வாழும் பரமீசுவரியோ

73. பரமீசுவரி - பரமேஸ்வரி
73

தெள்ளுபுகழ் மானவடிவு கண்டுசிந்தை மிகவே மயங்கி
வள்ளியரைத் தானெடுக்க என்ன வடிவெடுப்போம் வேலவரும்
74

குறவேஷமொடு வருவோம் வள்ளி தையலரைத் தானெடுக்க
பரதேசி வேடங் கொண்டு வள்ளிப் பாவையரை நாமெடுப்போம்
75

வளவிச்செட்டி வேடங்கொண்டு வள்ளிமாதரைக் கைப்பிடிப்போம்
இளகிமனம் வாடியதால் சுப்பிரமணியர் என்னவேடம் போடுவோம்

76. வளவி - வளையல் (பேச்சு வழக்கு)
76

வேடர்வேடம் போடுறதைக் கண்டு
மெல்லி நல்லா ளேது சொல்லுவாள்

77. மெல்லி - பெண்
77

வேறு

அன்னமே மாங்குயிலே - சின்ன
அஞ்சுகமே தேன்மொழியே

78. அஞ்சுகம் - கிளி
78


உன்னையல்லோ நானினைந்து - (இப்)பம்
உருகிமனம் வாடுகிறேன்
79

கன்னல் மொழி மின்னரசே - உந்தன்
கமலமுகம் காண்பதற்கு
80

என்னேனெஞ் சுருகு திப்போ - வள்ளி
ஏந்திழையே வாராயோ

81. ஏந்திழை - பெண் (அழகிய அணிகலன் அணிந்தவள்)
81

பட்டுடையும் தானிலங்கப்
பணிகள் மிகத் தான் துலங்க
82

இட்டமுடன் வந்துநின்று - இப்பம்
என் மயக்கம் தீராயோ

83. இட்டம் - அன்பு
83

காதழகும் மார்பழகும் - அளக*
முகத்தழகும் முத்தழகும்
*வசை முகத்தழகு என்றும் அமையும்
84

பாதச் சிலம்ப மேவு பண்பென்ன
பைங்கொடியே வந்திடாயோ
85

வனக் குறத்தி ஆசையினால் - வேலர்
மய்யல் கொண்டு தான் மயங்கி
86

எனக்கொருவர் தூது சொல்லி
இணங்கவரக் காணே னென்றார்
87

உன்னை மணம் செய்யுவேன் - உனைவிட்
டொருபக்கமும் போகேன் - என்னை
88

அன்னிதமென்று நினைந்துகொண்டால் - எனக்
காதரவார் பெண்ணே

89. அன்னிதம் - அந்நியம் என்பதன் பேச்சு வழக்கு
ஆதரவு - உதவி
89

ஆதரவென்று சொன்னால் - எனக்கு
அடுத்த கிளை நீயோ

90. கிளை - சுற்றம்
90

மித்திர பேதகம் பண்ணாதே நான் சகியேன் - இனிப்
பேசாமல் ஓடிப் போவீரே

91. மித்திரபேதகம் - நட்புப் பிரித்தல்
91

ஓடிப்போ என்று சொன்னால் - எனக்கு
உயிர்நிலை இங்கிருக்கே என்னைக்
92

கூடிக் குலாவியே கொஞ்சிக் கொண்டாலுன்
குருக்களுக்கே புண்ணியம்

93. குருக்கள் - குருமார்
93

புண்ணியமும் தவமும் மடந்தனில்
போனால் செய்வார்களே

94. மடம் - சத்திரம்
94

ஆரண்யமான வனந்தனிலே புண்ணியம்
ஆரிங்கே செய்யப் போறார்

95. ஆரணியமான வனம் - பெருங்காடு
95

ஆரிங்கே என்று சொன்னால் - எனக்
காதாரம் எங்கும் உண்டோ
96

சேரும் படிக்குநீ நம்பிக் கொண்டால் - உன்
சிநேகம் பிரியேனே
97

ஆற்ற மாட்டாமல் புகல் கெட்டு
அலைகிறீர் தொண்ணாந்து - சும்மா

98. ஆற்ற மாட்டாமல் - பொறுக்க மாட்டாமல்
தொண்ணாந்து - ஏங்கி (பேச்சு வழக்கு)
98

பீற்றாதே போமிந்த மட்டுக்கு - தர்க்கித்துப்
பேசினால் கோபம் வரும்

99. பீற்றாதே - தற்பெருமை பேசாதே
தர்க்கித்துப் பேசினால் - வாக்குவாதம் செய்தால்
99

கோபமுள்ள இடத்திலே அதிகக்
குணமுண்டு என்பார்களே - மனத்

100. மனத்தாபம் - மனவருத்தம்
100

தாபமில்லாமலே சேரு மந்திரித்
தாலுந்தன் தன்னாளாயிருப்பேன்

101. மந்திரித்தல் - மந்திரம் செபித்தல்
101

தன்னாளா யிருக்கநீ எனக்குத்
தாய்தகப்பன் கிளையோ
102

எட்டி உன்னாதே மெட்டி மின்னாதே*
இனி உன்னால் ஏன்றதைப் பார்

103. எட்டி உன்னுதல் - தாவி உயர்ந்து விரைந்தெழும்புதல்
*வெட்டி மின்னாதே என்றும்பாடம்-கண்டித்துப் பேசாதே
103

கோரணி பண்ணாதே இதுவரை
கோபம் பொறுத்திருந்தேன்

104. கோரணி - குறும்புச் செய்கை
104

ஆரென்றும் பாராமல் பாங்கியரை விட்
டடித்து முடுக்கச் சொல்வேன்

105. அடித்து முடுக்க - அடித்துத் துரத்த
105

அடித்து முடுக்க என்றால் எனக்கு
அவ்வளவும் லட்சம் பொன்னே
106

பிடித்த பிட்டுக்கு மண்சுமந்தே அடி
பட்டது சொக்க ரல்லோ
107

மனதுக் கேற்ற மாப்பிள்ளை தானே - குகனை
மணம் செய்துக்கோ வள்ளி மானே
108

தனதாகு மானால் வள்ளித் தாயே - கந்த
சாமி தருவார் வெகு நன்மையே

109. தனது (ஆகுமானால்) - நட்புரிமை
109


அசுரரைப் பொருதுமே வேலன் - அயி
லாண்டவள் உதவிய பாலன் சும்மா

110. அயிலாண்டவள் - அகிலாண்டேசுவரி - உலகநாயகி
110

வசியம் பனிரண்டுகை தோளன் - உந்தன்
மனதுக்கிசைந்த மணவாளன்

111. வசியம் - பரந்த
111

கழுகுமலையில் முருகேசன் - உந்தன்
கருணைக் கிணங்கும் உபகாரன் - அவரை
112

வேறு

தழுவிக் கொண்டால் வெகுசெம்மையே - கந்த
சாமி தருவேர் வெகு நன்மையே
113

கலியுக வரத குமாரன் - ஆர்க்கும்
கருணைக் குகந்த உபகாரன்

114.கலியுக வரதகுமாரன்-கலியுகத்தில் அருள்செய்யும்கடவுள்
114

சலியாமல் சேரச் சம்மதிப்பாயே - வள்ளித்
தாயேஉன் மனதில் பதிப்பாயே

115. சலியாமல் - துக்கப் படாமல்
115

ஆரோ எவரோ என்றெண்ணாதே - சும்மா
அணைந்துக்கோ வினைகள் வாராதே
116

வேறே பேதகம் நினையாதே - வெற்றி
வேலரைச் சேர்ந்துக்கோ மாதே

117. பேதகம் - வேறுபாடு
117

கமலச் சரவணச் சண்முகனே - மேவிக்
கலந்துக்கோ நல்ல சேவகனே

118.சரவணச் சண்முகன் - சரவணப் பொய்கையில்
வளர்ந்ததால் வந்த பெயர்
118

அசுரர் பணி குழந்தைக் குகனே - நீ
அணைந்து கொண்டால் நல்ல முகனே
119

வேலுண்டு வினையில்லை தானே - வெற்றி
வேலரைச் சேர்ந்துக்கோ மானே
120

தனித்துநீ இருப்பது வருத்தம் - இந்தச்
சாமிக்கும் உனக்கும் நல்ல பொருத்தம்
121

வள்ளியே உன்னைநான் கண்டேன் - இப்பம்
மையலைத் தீர்த்துவி டாயோ
122

கண்கொண்டு என்னைநீ பாராய் - சற்று
காத்துப் பார்த்துநீ தாராய்
123

வேறு

வேள்வி மலைக் கரசே சிற்றூர் குடி
வேடுவர் கோமானே (தனன)

124. வேள்வி மலைக் கரசு - வள்ளியின் தந்தைக்குரிய மலை
124

தாழ்விலா வாழ்க்கையுடன் எனைப்பெற்ற
தந்தையே அண்ணன் மாரே (தனன)

125. தாழ்விலா வாழ்க்கை - குறையா வாழ்க்கை
125

என் தாய் தேடினளே எனைத்தேடி
ஏங்கி இருப்பதுண்டோ
126

மறக்க மனம் கூடுதில்லை - வஞ்சி
மாதே உந்தன் மய்யல் கொண்டு
127

வாடுறேன் இப்போதே உறக்கமும்
வருகுதில்லை என்ன செய்குவேன்
128

வெயில்தனில் தனித்திருக்க விதிதானோ - உன்னை
விட்டிருக்கத் தாய்க்குச் சம்மதி தானோ

129. சம்மதி - சம்மதம்
129

நம்பின பேர்க்கு வஞ்சகம் செய்யலாகுமோ - உன்னை
நாடி வந்து வாடி நொந்து நையலாகுமோ
130

வம்பு சேரும் கொங்கைநடு வுற்று நானும் - முத்து
மாலையாய்க் குலுங்க வரம் பெற்றிலேனே

131. வம்பு - மார்புக் கச்சு
131

துள்ளுமுன் விழியிலிட்ட மைய தாகவே
துலக்கமா யிருந்தேனில்லை மெய்ய தாகவே

132. துலக்கம் - விளக்கம்
132

வள்ளியுடன் முகத்தில் பூசு மஞ்சளாகவே
மாதுடன் இருந்தே னில்லை தஞ்ச மாகவே

133. தஞ்சம் - அடைக்கலம்
133

கன்னல் மொழி மாது - வள்ளி
மின்னாள் அப்போது
134

அப்பனே குமராண்டி - உன்
தகப்பன் பேயாண்டி சொன்னால்
135

தண்ணீர் உண்ணநீர் எண்ணாமலே
நின்னீர் யெப்பவே உன்னை வேண்டித்
தொழ யிருப்பவே மனம் பூண்டீர்

136. நின்னீர் - நின்றீர்
136

அடியேன் வெண் ணீறணிந்தேன் உந்தன்
குடிநான் என்று துணிந்தேன்
137

மிடிதீர எனைப்பாரும் - இந்தப்
படியோர் புகழ் காரும்

138.மிடி - வறுமை
காரும் - 'காப்பாற்றும்' என்பதன் மரூஉ
138

வானோர் புகழ் வேலர் - நீர்
தானா வென்று துதிப்பேன்
139

இறைப் போதிலும் பிரியேன் - மாத்
திரைப் போதிலும் மறவேன்

140. இறைப்போது - சிறிது நேரம்
மாத்திரைப்போது - கைந்நொடி நேரம்
140

துரையாகிய செந்தூரச் சந்த
வரை மேவிய குமரா
141

பவனிச் சிறப்பு

பானை வயிற்றோன் கழலினை
பண்புடன் போற்றுவோமே - நற்கதலி
பழமொடு சர்க்கரை அவலொடு எள் பொரி
பலகனி பட்சண வகை
சடுதியில் அருந்தியே பாரத மேரு
வரைந்தோன் இளையவர் பாதம் பணிந்திடுவோம் (தனன)

142. பானை வயிற்றோன் - பிள்ளையார்
கதலி - வாழை; சடுதியில் - விரைவில்
142

வாரணங் கொட்டு முகில் மாதரசி வர
வந்து நடனஞ் செய நட்டுவர்கள்
மங்கையர் கொங்கைகள் செங்கை குலுங்கிட
மத்தள வீணைகள் கைத்தாளம் நேர்செய்ய
மாதர்கள் ஆடிடவே சுப்பிரமண்யர்
வந்தார் பவனிதனில் (தனன)
143

காரணனாக வந்து அடியாரைக்
காப்பது நின்கடன் காண் பொதிகையில்
கரக முனிக்கொரு குருவெனப் பத்திரு
கரமயில் கொடுவினை அறுபட ஏவிய
கழுகு மலைக் குமரா குறவள்ளி
காதலனே குகனே (தனன)

144.காரணன் - கடவுள் - "உயிர்கட்கெல்லாம் காரணம்
ஆய மேலோன்" (கந்தபுராணம்); கரகமுனி - குடமுனி
பத்திரு கரம் அயில் கொடு - பன்னிரு கைகளில்
வேலினைக் கொண்டு
144

அந்திமதி சூடும் பரமன்
அருளிய பாலகனே - கொடிய
அமர்தரு செருவினில் இயல்கொடு சமர்செய
அலகை நிணம்உண கழுகு குதிகொள
அசுரர்கள் மாய்ந்திடவே - தெய்வ லோகத்து
அமரர் சிறை மீட்டாய் (தனன)

145. அமர்தரு செரு-உக்கிரம் மிகுந்தபோர் நிகழுமிடம்
இயல் - முறை; அலகை - பிசாசம்
குதிகொள - குதித்தல், பெருகுதல்
145

விந்தை பேர்க் காவில் குறத்தியை
மேவிடவே நினைந்தாய் - குறவரில்
வில்லும் அம்பொடு செல்லும் பேர்துணை
வெல்லவே நினை வல்லவோ முன்
வேங்கை மர மாகி நின்றதொரு
வேலவ னேகுக னே (தனன)
146

வரம் பெற்ற கும்ப கர்ணன் இந்திர சித்து
மற்றுள பேரை எல்லாம் அடக்கியே
வஞ்சக ரானவர் நெஞ்சில் அறைந்திட
வாளிய தேவிய மால் மருகா குகா
வாய்த்திடு நற் கழுகு மலைதனில்
வாழும் குருபரனே (தனன)

147. வாளி - அம்பு; மால் - திருமால்
147

திறமுற்ற பன்னிருகை அயில்கோடு
சிந்தினை வேரறுப்பாய் - கயிலைச்
சிவமய ருத்திரன் அருளிய புத்திரனைத்*
தினமும் நினைத்திட வினைகள் அறுத்திடும்
சேவற் கொடியனே உனை நிதம்
சேவடி போற்றுவமே (தனன)

148. சிந்து - கடல் (வேல் கொண்டு வேலைப்
பண்டேறிவோனே - திருப்புகழ்)
சிவமய ருத்திரன் - மகா சங்கார காரணன் (அழித்தற் கடவுள்)
*புத்திரனே என்றும் பாடம்
148

ஆனையை முன்னாளில் சலந்தனில்
ஆம் கரா பற்றிட மூலமென்று
அழைக்கும் அக் கரி பிழைக்க நேமி தொட்டங்(கு)
கராவை முன் சங் கரித்திடும்
அரி மருகா குகனே நின்னடி
அன்புடன் போற்றுவமே (தனன)

149. கரா - முதலை; நேமி - சக்கரம்
149

செந்தினில் வளர்ந்த குமரன் அடியவர்
சிந்தையில் நிறைந்த முருகன் - கனக்குழல்
தெய்வத் திருமடந்தை கணவனைச்
சேவடி போற்றுவமே - தனன
சுந்தர மிலங்கு மயிலன் நலம் பெறுஞ்
சுந்தரி தருங் குருபரன் கதிர்சொரி
துய்யவடி வேலன் பாதமலர்
சூழ்ந்து வணங்குவமே (தனன)

150. சுந்தரம் இலங்கு மயிலன் - அழகியமயிலூர்தி உடையவன்
நலம் பெறுஞ் சுந்தரி - உமை; துய்ய - தூய - பரிசுத்த
150

செஞ்சர ணிறைஞ்சும் அடியார்க் கருள்தரும்
கஞ்ச மலர் மிஞ்சு சரணம் - தினைப்புனம்
சென்று குறமாதைப் புணர்ந்தருள்
தேசிகனைப் பணிவோம் (தனன)

151. செஞ்சரண் - சேவடி
கஞ்சமலர் மிஞ்சு சரணம் - தாமரையினை வெல்லும் சேவடி
151

தேசிகன் குருபரன்
அஞ்சின் இறை அஞ்சிலேன் - மெய்க்
கதிபுரை அம்பிகை
அலர்ந்த கருணைத் துரைத்திரு
ஆறுமுகக் குமரன் பதத்தை
அனுதினமும் வாழ்த்துவமே (தனன)

152.அஞ்சின் இறை அஞ்சிலேன் - ஐந்து புலன்களின்
அலைக்கழிவுக்கு அஞ்சாத என்னுடைய மெய்க்கதி
என்று கொள்ளலாம்
152

தோடவிழ் கடப்ப மலரும் பிரசம் கமழ்
ஏடவிழ் நறைத் தொடையலும் புனைந்தருள்
சோதிவடி வேலன் பதத்தைத்
துதித்து நாம் வாழ்த்துவமே (தனன)

153. தோடு, ஏடு - இதழ்; பிரசம் - தேன்
153

காடுறுமாச் சிறுமியைத் தினந்தினம் நாடி
மயலுற்ற தன்னை முன்னின்று
காத்த தனிக்குமரன் பதத்தைக்
கனிந்து வணங்குவமே (தனன)

154. காடுறுமாச் சிறுமி - தினைப் புனைத்திலிருந்த வள்ளி
154

வண்டுகுடி கொண்ட குழலின் - வணங்குவார்
பண்டை வினை துண்டு செயுமின் - பத்திரு
வள்ளிக் கிசைந்த குகன் பதத்தை
வணங்கிக் கொண்டாடுவமே (தனன)

155. பண்டை வினை - முன்வினை
155

சண்டனுடலங் கிழிபடத் திருக்கழல்
தந்த விமலன் தருகுகன் தனைத் தினம்
சாமி எனப் பணிவார் அருவினை
தானறும் நிச்சயமே (தனன)

156. சண்டன் - காலன் (எமன்)
156

திண்டிறல் மிகுங் குருபரன் திரள் செயும்
வண்டுகள் முழங்குமாலை சூழ
திருச் செந்தில் மால்வரை மேல் சிறந்த
வேலவனை வாழ்த்துவமே (தனன)

157. திண்டிறல் - மிகுவலி
திரள் செயும் வண்டுகள் - மிகுந்து முழங்கும் வண்டுகள்
157

பண்டுகட லுண்ட முனிவன் - கழலினை
தெண்டனிட வண்டமிழ் உரைதனைப் புகலும்
பன்னிரு கைக் குமரன் பதத்தைப்
பணிந்து கொண்டாடுவமே (தனன)
158

பள்ளு

கொண்டல் இளசைக் குமரன் எட்டேந்திரன்
மண்டலீகன் பண்ணை தனிலே - இன்று

159.கொண்டல் இளசை - மேகம் தவழும் இளசை
(மழைவளம் பொருந்திய இளசை)
மண்டலீகன் - மண்டலாதிபதி
159

கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக்கும் உள்ள
கணக்கு நான் சொல்கிறேன் ஆண்டே

160.ஆண்டே - பண்ணை முதலாளியைப் பணியாள்
அழைக்கும் முறை
160

மாலோன் வணங்கும் எட்டீசுபரன் கோவில்
வகைக்கேநற் சீரகச் சம்பா நெல்லில்
161

நாலாயிரம் கோட்டை ஓர் தொகையாய்
நம்மள் நாதர் பட்டர் வசம் அளந்தேன்

162. நம்மள் - நம் (நம்ம - நம்மள் - பேச்சுவழக்கு)
162

மெய்யான காரணராம் வெங்கிடாசல
விட்டுணு கோவிலுக்குந் தன் சம்பா நெல்லில்
163

அய்யாயிரம் கோட்டை நம்பி திருமலை
அய்யங்காரர் தன்வசம் அளந்தேன்
164

சாத்தூர்ப் பெருமாள் படித்தரம் பூசை
தவறாமல் என்றும் நடக்க உங்கள்

165. படித்தரம் - கோவில் முதலியவற்றுக்குச் செய்யும் கட்டளை
165

வார்த்தைப் படிக்கு ஆயிரம் கோட்டை கஸ்தூரி
வாரணனம் பாரத்தில் அளந்தேன்

166. கஸ்தூரி வாரணன் - பெயர்
அம்பாரம் - குவியல்
166

விண்ணோர் புகழும் கழுகா சலக்குக
வேளுக்குப் பூந்தாளைச் சம்பா நெல்லில்

167. பூந்தாளைச் சம்பா - நெல்வகை
167

அண்ணர் பட்டம் வசம் எண்ணாயிரம் கோட்டை
அட்டி பண்ணாமல் அளந்தேன்

168. அட்டி பண்ணாமல் - தடை சொல்லாமல்
168


கந்தன் குமர ரெட்ட பாண்டிய தெய்வேந்திரன்
கண்ணன் திருநாமம் துதிக்கும் நாகூர்
169

முத்துப் புலவர் வளவுக்குத் தானுண்ண
முன்னூறு கோட்டை நெல்ல ளந்தேன்

170. வளவு - இருப்பிடம்
170

திட்டமதாய்க் குளம் வெட்டுக் கென்றே - சேரில்
கட்டுநெல் லாயிரம் கோட்டைக் (குளத்)தைக்

171. சேர் - நெற்கூடு, வைக்கோல்புரி சுற்றி அமைப்பது
171

கெட்டியதாய் நோட்டம் பார்க்கின்ற ராக்கப்பன்
செட்டியார் தன்வச மளந்தேன்
172

சட்டமதாகப் படிக்கும் கனக
சபாபதியா பிள்ளை கணக்கின் படி

173. சட்டமதாக - செவ்வையாக
173

கொட்டிய முத்துப் பேயன்பால் எண்ணாயிரம்
கோட்டை நெல் பாட்டத்தில் அளந்தேன்

174. முத்துப்பேயன் - முத்தப்பய்யன்; பாட்டம் - பகுதி
174

உவணகிரி சுத்தித்தேர் ஓட்டி வைப்பதற்கு
ஒன்பதினாயிரம் கோட்டை நெல்

175. உவணகிரி - கழுகுமலை (உவணம் - கழுகு)
175

எவரும் புகழும் குமாரவேல் மணியத்துக்கு
ஏற்கவே தீர்க்கமாய் அளந்தேன்

176. தீர்க்கமாய் - திட்டமாய்
176

சம்பாதி வெற்புக் குமர குருபரர்
சன்னிதிச் சத்திரம் நடக்க வென்றே

177. சம்பாதி வெற்பு - கழுகு மலை
177

கொம்பு பெறவே தொண்ணூற் றொரு
கோட்டைநெல் சுப்பன் பகுதியில் அளந்தேன்

178. கொம்புபெற - மேன்மை பெற
பகுதி - வருவாய்
178

இந்தவகை அன்பத்தீராயிரத் தெழுநூற்று
ஒரு கோட்டைநெல் நீக்கிச் சேரில்

179. அன்பத்தீராயிரம் -ஐம்பத்தீராயிரம்
179

வந்தநெல் தொண்ணூத்தி ரெண்டுலட்சம் கோட்டை
சொந்த இருப்பு காணாண்டே
180

தீர்த்த விசேடம் பெறும் தனுக்கோடி
சிவராம லிங்கருக் கென்றேகண் பார்த்தும்
181

ஓராயிரம் கோட்டைநெல் நேர்த்தியாய்ப்
பள்ளையச் சம்பா நெல்லளந்தேன்

182. பள்ளையச் சம்பா - நெல்வகை
182

காசினி போற்றிடு மாற்றினிக் கிரிக்கோவில்
கட்டளைக் கெண்ணூறு கோட்டை விசு

183. கட்டளை - கோவில்களுக்குச் செய்யும் நிபந்தனை
183

வாசமதாய் நமசிவாயம் பண்டாரம்
வசத்தில் மிளகுநெல் அளந்தேன்
184

கூடல்வளர் சொக்கேசர் மீனாட்சிக் கெண்ணூறு
கோட்டைநெல் குங்குமச் சம்பாயிந்த
185

நாடறியும்படி கட்டளை மீனாட்சி
நாதர்பட்டம் வசமளந்தேன்
186

தாழ்வு வராமலே கேசய்யங் காற்குப்பூந்
தாளைச் சம்பா நெல்லளந்தேன்
187

காந்திமதி வடிவாள் நெல்லை நாயகர்
கட்டளைக் கெண்ணூறு கோட்டை
188

வராந்தக மாகப்புளுகு சம்பா நெல்லை
வாரிக் கையாரவே அளந்தேன்

189. வராந்தகம் - வராத்தம் - கட்டளை
189

புன்னைவனச் சங்கரேசுபரர் கோவிலுள்
பூசை தவறாமல் நடக்கத்தானே
190

அன்னதானச் சம்பா ஓர்தொகையாக
அளந்தேன் அறுநூறு கோட்டை
191

ஆதிவெயில் உகந்தாள் முப்பிடாரி
அலங்காரிக் கஞ்ஞூறு கோட்டை மனு

192. அஞ்ஞூறு - ஐந்நூறு
192

நீதியாகவே பண்டாரம் கையினில்
நேர்முத்துச் சம்பா நெல்லளந்தேன்

193.பண்டாரம் - சிவனடியார்; இச்சொல்
பண்டாரகன் என்பதன் திரிபு
193

மங்காத சீர்த்திபெறும் எட்டயபுரம் தனில்
தங்காளி நாயகிக் கென்றே - கன
194

பொங்கமாய் முன்னூறு கோட்டைநெல்
பூசாரி அங்கணன் பாரிசம் அளந்தேன்

195. கனபொங்கம் - பெருமையும் பொலிவும்
பாரிசம் - வசம் - இடம்
195

செப்பமுறும் தவசித் தம்பிரானுக்குச்
சித்திரக் காலி நெல்லதிலே சைவ
196

சுப்பன் பண்டாரன் வசமளந்தேன் ஓர்
தொகையாய் அறுநூறு கோட்டை
197

தாரணி போற்றும் இளசை அன்னதானச்
சத்திரத்துக்கே ராசவெள்ளை நெல்லில்
198

ஆருமகிழச் சிதம்பரத் தய்யன் வசத்
தாயிரங் கோட்டைநெல் அளந்தேன்
199

குலதெய்வமென்னுஞ் சகதேவிக் கானைக்
கொம்பன் சம்பா நெல்லதிலே நான்
200. சகதேவி - குலதெய்வத்தின் பெயர்
ஆனைக் கொம்பன் - நெல் வகை
200

நிலவரமாக முன்னூத் தஞ்சு கோட்டைநெல்

201. நிலவரம் - இங்கு வழக்கப்படி என்று கொள்ளலாம்
* நேற்று அந்தி எனப் பிரியும்
201

காசி கேதாரத்தினில் வாசமிகு விசுவேசர்
படித்தரம் நடக்கப்படி

202.படித்தரம் - கோயில் முதலியவற்றுக்கு உதவும்
தினசரிக் கட்டளை
202

பூசை தவறாமல் ஆயிரம் கோட்டைநெல்
போசன சம்பா நெல் அளந்தேன்

203. போசன சம்பா - நெல்வகை
203

மங்கையெனும் கோவில்பட்டி தனிலே
வாழ்பூவண நாதருக் கென்றே வெகு
204

இங்கிதமாகவே முன்னூறு கோட்டை
நெல்லிற்குச் சம்பா நெல்லளந்தேன்

205. இங்கிதமாக - இனிமையுடன்
205

சந்தவரை திருச்செந்தூரில் மேவிய
சண்முகனார் கட்டளைக்கே நல்ல
206

வெந்தயச் சம்பா எழுநூறு கோட்டைநெல்
வேலன் பகுதியில் அளந்தேன்

207. வெந்தயச் சம்பா - நெல்வகை; பகுதி - வருவாய்
207

சாத்திர தோத்திர வேத பாராயணத்
தாத் தய்யங்கார் வகைக்கென்றே
208

ஆத்தி கிணத்தினில் அஞ்ஞூறு கோட்டைநெல்
காத்தன் பகுதியில் அளந்தேன்
209

ஆதிக்கற்குப் பராபரி யாகிய
ஆன கண்ணப் பருந் தனக்கு
210

மாதிஷ்டமாகவே எண்ணூற் றஞ்சு கோட்டைநெல்
மாசற்ற சம்பாவில் அளந்தேன்
211

நற்றமிழ் ஓங்கும் கடிகைப் புலவர்
நமச்சிவாயப் புலவருக்கே துரை

212. துரை - தலைவர்
212

சொல் தவறாமல் முன்னூற்றஞ்சு கோட்டைநெல்
தூய வெள்ளை தனில் அளந்தேன்
213

வீணைதனில் சுர ஞான மிசைத் திடும்
வெள்ளை அண்ணாவி குமாரர் தனக்கும் என்று

214. சுர ஞானம் - இசை அறிவு
அண்ணாவி - கூத்து முதலியன பழக்குபவர்
214

வான்புகழ் தொண்ணூற் றஞ்சு கோட்டை நெல்
வாழைப் பூச் சம்பாவில் அளந்தேன்

215. வாழைப்பூச் சம்பா - நெல்வகை
215

சம்பிரதிப் பிள்ளை வயித்திய லிங்கர்
தயாலெழுதுங் கைக் கணக்கின் படி

216. சம்பிரதி - தலைமைக் கணக்கன்
216

அம்பாரஞ் சேரில் களஞ்சியந் தோறும்
அனேக நெல் கட்டினேன் ஆண்டே

217.அம்பாரம் - சேர், களஞ்சியம்;
நெல் சேர்த்து வைக்கும் இடம்
217

இத்தனை நெல்லும் உள்ளூர் மணியம்
வெங்கடேச ரெட்டு முன்னிலைக் கேயின்று

218. மணியம் - விசாரணைக் காரர்
218


கந்த னனுத்தாரப் படிக் களந்துமே
கட்டி வைத்தேன் பண்ணை ஆண்டே
219

நந்தவனச் சிந்து

சந்தமிகும் புஷ்பவனமே - முத்து
சாமி செய்த நந்தவனமே - என்று
220

சார்ந்தார் களிகூர்ந்தார் - மனந்
தேர்ந்தார் கலி தீர்ந்தார்

221. கலி - சிறுமை, வருத்தம்
221

கொந்து கொந்தாய் மலர்தூவும் - மயல்
கொண்டிடவே குயில் கூவும்

222. கொந்து - கொத்து
222

பின்னும் கூடும் பெடையோடும்
உறவாடும் விளையாடும்
223

பஞ்சவர்ணக் கிள்ளைச் செறிவும் - வெகு
பாந்தக் கலவிகள் புரியும் - கனி
224

பழுக்கும் கொத்தி இழுக்கும் - பிரசம்
ஒழுக்கும் நிலம் வழுக்கும்

225. பிரசம் - தேன்
225

அஞ்சிறைத் தும்பிகள் ஓங்கும் - குயில்
அன்புடன் வயினால் வாங்கும் - மலர்

226.அஞ்சிறைத் தும்பி - 'கொங்கு தேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பி' - குறுந்தொகை - ஒப்பு
226

அடுக்கும் கீதம் தொடுக்கும் - மார்க்க
மெடுக்கும் இன்பம் கொடுக்கும்

227. கீதம் - இசை
மார்க்கம் - கூத்து வகை
227

இச்சையுடன் இரண்டு மந்தி - மாவில்
ஏறிப் பலாக்கனி அருந்திக் - கனிக்

228. கனிக்கெதிரும் - கனிக்காக எதிர்த்துக் கொள்ளும்
228

கெதிரும் சோலை உதிரும் - சுளை
உதிரும் கனி உதிரும்
229

உச்சிதச் செண்பகத் தோப்பும் - பெண்கள்
ஊடே மலர் கொய்யும் தாப்பும் - தென்றல்

230. உச்சித - உயர்ந்த
தாப்பு - நேரம், சௌகரியம், இடம்
230

ஓட்டமும் மலர் ஆட்டமும் குயில்
ஈட்டமும் கன தேட்டமும்

231. ஈட்டம் - கூட்டம்; தேட்டம் - செல்வம்
231

கற்பகக் காவனம் போலே - மயக்கங்
காணுதடி ஒருக்காலே - சுத்திக்

232. கற்பகக்கா - கற்பகச் சோலை
காவனம் - சோலை - ஒருபொருட் பன்மொழி
ஒருக்கால் - ஒருமுறை
232

கன்னலும் வளந் துன்னலும் கன
சென்னெலும் சடைப் பின்னலும்

233. கன்னல் - கரும்பு; வளந்துன்னல் - வளம் சேர்த்தல்
சென்னெல் - செந்நெல், எதுகைக்காகத் திரிந்தது
233

பொற்ப மிகுங்கன வாளையும் - தன்பூட்
டுட வாளெனும் தாளையும் - சாலைப்
234

பொங்கமும் திருவங்கமும் மகன்
சங்கமும் பிரசங்கமும்

235. பொங்கம் - பொலிவு
அங்கம் - அலங்காரம்
சங்கம் - கூட்டம்
235

குங்குமச் சந்தன மரமும் - புன்னை
கொண்டு வளர்ந்திடு முரமும் - மலர்க்
236

கொல்லையும் மணமுல்லையும் - பசுங்
குல்லையும் திருவில்லையும்

237. குல்லை - இருவாட்சி; வில்லை - வில்வம்
237

புங்கமிகு நந்தவனமும் - தெய்வ
பூமியிற் கற்பக வனமும் - கண்டு

238. புங்கம் - உயர்ச்சி
238

புகழ் ராதை இகழ்வார் மனம்
மகிழ்வார் கிட்ட யகழ்வார்
239

மாமரம் தோறும் உலாவி - குயில்
மாரனை வாவென்று கூவி - அதில்
240. மாரன் - மன்மதன்
240

வசிக்கும் குடல்பசிக்கும் - மெத்த
ருசிக்கும் கனி பொசிக்கும்
241

தென்னங் குரும்பையைத் தின்று
தெற்கே நிழலிலே உறங்கும் - மனம்
242

செழிக்கும் உடல் நௌிக்கும் முகம்
களிக்கும் மதங் கொழிக்கும்
243

பன்னகந் தென்றலைப் புசிக்கும் - கன
பண்புயரு மலையினில் வசிக்கும் - பல

244. பன்னகம் - பாம்பு
244

வளமும் பரிமளமும் கடல்
வளமும் மலை வளமும்

245. பரிமளம் - நறுமணம்
245

தங்கும் வளம் கண்டு மகிழ்ந்தார் - முத்து
சாமி தெய்வேந்திரனைப் புகழ்ந்தா - ருப

246. முத்துசாமி தெய்வேந்திரன் - பாட்டுடைத் தலைவன்
246

சரித்தார் மெள்ளச் சிரித்தார் - மலர்
பறித்தார் குழல் தரித்தார்
247

காவடிச் சிந்து

தாயே சரசோதி - அருள்
தரவேணுநீ தாயே

248. சரசோதி - சரசுவதி என்பதன் இசை வழக்குத் திரிபு
248

வாயீசுபரி அரசே - தமிழ்
வாணற் கருள் புரிவாய்

249. வாயீசுபரி - வா ஈச்வரி என வரும்
249

காவடிச் சிந்துபாடி - உந்தன்
கருணை மலர் தேடி
250

சேவடி தனைப் போற்ற - அருள்
புரிவாய் மனம் மகிழ்வாய்
251

ஆண்டி குமராண்டி - எழில்
அழகு மயிலாண்டி
252

மூண்டி ரண சூரர்களைத்
தாண்டி மயி லேறி

253. மூண்டி - கூடி ; இரணசூரர் - யுத்தவீரர்
253

முவ்விரண் டாறுமுகம்
எவ்வாரென் றறிந்து

254. மூவிரண்டு - முவ்விரண்டு எனக் குறுகியது
254

செவ்வே வழி நடந்தால் சிவன்
அவ்வாறே துணை செய்வார்

255. செவ்வே - நேரே நன்றாக
255

மாலிதனை வெல்வேன் - சரவண
வாவென்று சொல்வேன்

256. மால் - மயக்கம்
256

பரனே அறுமுகனே உனதிரு
நீறிட வினை தீர

257. உன - உன்னுடைய
257

ஞானக் கடல் மூழ்கி - வெகு
மானத்துடன் வாழ்க

258. வெகுமானம் - பரிசு, சன்மானம்
258

பாடுவமோ இவ்வனத்தை - வேலர்
பண்புனத்தை நாடுவமோ

259. பண்புனம் - பண்படுத்தப்பட்ட புனம்
259

தேடுவமே இவ்வனத்தில் - வேலர்
சிறந்திருக்கும் இடந்தேடி
260

ஓடுவமோ கிரியைச் சுற்றி
ஒளிந்திருந்தால் பிடிக்க லாமோ
261

ஆடுமன்ன மயிலினங்காள் - செந்தூர்
ஆண்டி வேலர் வரக் காணையளோ

262.காணையளோ - கண்டீர்களோ அல்லது
காணீர்களோ என்பதன் வட்டார வழக்கு
262

சின்ன அன்ன மயிலினங்காள்
செந்தூர் சேவகனைக் காணையளோ
263

அன்னநடைப் பட்சிகளே - எங்கள்
ஆண்டி வரக் காணையளோ
264

மாடப்புறாக் கிளிப் பிள்ளை - வடி
வேலர் வரக் காணையளோ
265

வாடை கண்டு மயங்கி வரும் - வடி
வேலர் வரக் காணையளோ

266. வாடை - வடகாற்று
266

சூரனையும் சூறையாடி வந்த
சொகுசன் வரக் காணையளோ

267. சூறையாடுதல் - அலைகழிக்க (வென்ற)
சொகுசன் - சுகானுபவமுள்ளவன் - நாகரிகன்
267

ஏறுமயில் ஏறிவரும் - எங்கள்
இறையவனைக் காணையளோ
268

கரடி பன்றி யாளிகளே - செந்தூரக்
கந்தன் வரக் காணையளோ
269

ஓரடியா லளந்தவர் தன் மருகன்
உத்தமனைக் காணையளோ
270

காடைகளே கவுதாரிகளே - செந்தூரக்
கந்தன் வரக் காணையளோ

271. காடை, கவுதாரி - பறவையினங்கள்
271

தேடி வரும் புள்ளினமே - செந்தூரச்
சேவுகனைக் காணையளோ
272

பஞ்சவர்ணக் கிள்ளைகளே - சிவன்
பாலன்வரக் காணையளோ
273

கொக்கினங்காள் குருகிணங்காள் - செந்தூரக்
குமரன் வரக் காணையளோ
274

சோலையில் வாழ் குயிலனங்காள் - செந்தூரச்
சொகுசன் வரக் காணையளோ
275

காலைமதி சூடிதரும் - கந்த
சுவாமி வரக் காணையளோ
276

பாய்ந்து வரும் புலிகரடி - சிவன்
பாலன் வரக் காணையளோ
277

மேய்ந்து வரும் தாராவே - எங்கள்
வேலர் வரக் காணையளோ

278. தாரா - ஒருவகைப் பறவை
278

கூவுகுயில் மயிலினங்காள் எங்கள்
குமரன் வரக் காணையளோ.
279

சுப்பிரமணியர் பேரில் சிந்து முற்றும்

நன்றி :- http://library.senthamil.org/097.htm


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment