சீர்பூத்த தென்குடவை தேவி ஆனந்தவல்லி பார்பூத்த செங்கமலப் பாதம் தனைப்போற்றி 1. சீர்பூத்த - சிறப்பு மிகுந்த பார்பூத்த ... பாதம் - அன்னையின் திருவடி உலகின் தோற்றத்திற்குக் காரணம் என்றபடி. "இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன"- ஐங்குறுநூறு | 1 |
செப்பரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட கற்பகக் கன்றான கணபதி காப்பாமே 2. கற்பகக் கன்று - அருள் வழங்கும் இளங்களிறு | 2 |
வெள்ளைக் கலையாளே வெண்டா மரையாளே தெள்ளரிய ஞானத் திரவியமே வந்துதவாய் | 3 |
வீறுதரு சூரர்களை வென்றுலகைத் தானாண்ட ஆறுமுகனே அடியாற்கு வந்துத வாய் | 4 |
தெள்ளரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட வள்ளி தெய்வானை மலரடியே காப்பாமே | 5 |
கடவுள் வாழ்த்து பனிமதிச் சடையாள் ஈசன் பரமனார் பாதம் போற்றி கனியிதழ் உமையாள் சோதி காரணி தன்னை வாழ்த்தி 6. காரணி - காரணமானவள் | 6 |
புனிதமாம் எண்ணெய்ச் சிந்தைப் புவிமிசை பாடுதற்குத் தனியொரு கடவுளான தந்தியைச் சிந்தை செய்வோம் 7. கடவுளான தந்தி - ஆனை முகக் கடவுள் | 7 |
அடிமுடி இல்லான் பின்னும் யாவையும் படைத்தோன் என்றும் படிநமக் களக்கும் ஈசன் பரமனார் கிருபை யாலே | 8 |
மடிதனில் அமிர்த மூட்டி வளர்த்தாய் மனதி ரங்கி சடுதியில் அனுப்பு மம்மா சரணம் சரணம் தாயே 9. மடிதனில் - கருவறையில்; சடுதியில் - விரைவில் | 9 |
வேறு மண்ணுலகும் விண்ணுலகும் மற்றும் புவிவாழ்க எண்ணும் புவியில் இருநிதியம்தான் பெருக 10. இருநிதியம் - பெருஞ்செல்வம் | 10 |
கோதில்லா ஞானக் குருதே சிகனருளால் தீதில்லா எண்ணெய்ச் சிந்துதனைப் பாடுகிறேன் 11. கோது - குற்றம் | 11 |
ஒன்றுமில்லாக் காலம் உலகம் யாவும் படைத்து இன்றுநமை நடத்தும் ஏகன் திருவருளால் 12. ஒன்றுமில்லாக் காலம் - மகா சங்காரகாலம், கடையூழிக்காலம் ஏகன் - ஒப்பற்ற ஒருவன் (ஏகன் அநேகன் - திருவாசகம்) | 11 |
முட்டைக் கருவால் முடிந்து புவிதனிலே விட்டஇறை யோன்இரக்கம் விள்ளமுடியாது 13. இறையோன் இரக்கம் - உலகினைப் படைத்த தனிப்பெருங்கருணை | 13 |
எட்டாது புத்திதன்னால் பாவிக்கக் கூடாது சட்டமெமைப் படைத்த சுவாமி கிருபையதால் 14. பாவிக்கக் கூடாது - பாவனைக்கு எட்டாது, நினைப்பரிது சட்டமெனப் படைத்த என்றும் பாடம் | 14 |
திட்டமதாய்ச் சூழுகின்ற தீவினைக்கெல் லாம்பிழைத்து சட்டமாய் இப்போ தமிழறியும் காலமதில் 15. சட்டமாய் - சட்டம் - செப்பம். சட்ட - செப்பம் உணர்த்த நின்ற தோர் இடைச்சொல் அது சட்டம் என மருவியது. (சிவஞானமுனிவர்) | 15 |
துட்டத் தனம்போக சூதுவஞ் சனையகல பட்டமரம் தனிலே பச்சைத்தளிர் ஆனாற்போல | 16 |
ஆவ லுடனே அண்ணாவி தன்னிடத்தில் பாவ புண்ணிய மறியப்பள்ளிக்கு வைத்ததுவும் 17. அண்ணாவி - கூத்து முதலியன பழக்குவோர் - இங்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியரைக் குறித்தது பள்ளிக்கு வைத்தல் - பள்ளிக்கு அனுப்பல் | 17 |
அண்ணாவி தாமும் அறிவித்த ஞானமது நண்ணாகச் சொல்லுகிறேன் நாட்டிலெந்தன் மாதாவே | 18 |
மண்ணும் புவியில் மணவாளனும் மாதும் மின்னதிகச் செல்வம் மிகவாழ்ந் திருக்கையிலே 19. மணவாளன் - கணவன் | 19 |
புத்திரனே வேணுமென்று புண்ணியம்செய் யத்துணிந்து சத்திரங்கள் அம்பலங்கள் சாலை மடங்கள்செய்து 20. சத்திரம் - தங்கும் இலவசக் கூடம் அம்பலம் - மன்றம்; சாலை - உணவிடுமிடம் | 20 |
ஆதித்த வாரம் வாசி ஆதரித்து நீதியுடன் தானதவம் நேராக வேபுரிய 21. ஆதித்த வாரம் - ஞாயிறு; வாசி - மூச்சோட்டம் | 21 |
கண்டு சிவனார் கருணை மிகவிரங்கி தொண்டு மிகச்செய்த தோகையாள் தன்வயத்தில் 22. வயத்தில் - வயிற்றில் | 22 |
சற்புத் திரனாகத் தானருளிச் செய்தனராம் விற்புருவ மாதுநல்லாள் மேன்மையுடன் பெற்றெடுத்த 23. சற்புத்திரனாக - உயர்ந்த மகனாக | 23 |
வல்ல பிறையும் வளரும் வகைபோல் செல்லக் குமரனையும் சீக்கிர மாய்வளர்த்து | 24 |
பண்ணு தமிழைப் படிப்பிக்க வேணு மென்று மன்னவனும் தேவியுமாய் மனதில் மிகநினைந்து 25. பண்ணு - ஓசை | 25 |
காலுக்குத் தண்டை கழுத்துக்குக் காறையுடன் கோலவர்ணச் சோமனையும் கொய்து மிகவுடுத்தி 26. காறை - கழுத்தணியுள் ஒன்று; சோமன் - வேட்டி கொய்து - கொசுவி, மடித்து | 26 |
வீரச்ச தங்கை விரலுக்கு மோதிரமும் ஆரமிகப் பூட்டி அன்பாய் அலங்கரித்து 27. ஆரம் - மாலை | 27 |
திரிபுண்ட ரீகத் திருநீறும் தான்பூசி வெறிமாலை சுற்றி விளங்கு திலகமிட்டு 28. திரிபுண்ட ரீகம் - திரி புண்டரம், மூன்றுவரியாய்ப் பூசும் திருநீறு; வெறிமாலை - மணமிக்க மாலை | 28 |
காதில் கடுக்கனிட்டுக் கனத்த முருகும் தூக்கிச் சீதநறும் வெள்ளி எழுத்தாணி தான்சேர்த்து 29. முருகு - காதணியில் ஒன்று; கனத்த - பருத்த | 29 |
வாத்தியார் தன்னை வரவழைத்து அந்நேரம் கோத்திரத்தில் உள்ளோரும் கூடி மிகஎழுந்து 30. கோத்திரத்தில் உள்ளோர் - சுற்றத்தார் | 30 |
பள்ளிக் கூடத்தில் பண்பாகச் சென்றுபுக்கு விள்ளரிய ஞான விமலன் திருவருளால் 31. விள்ளரிய - கூறமுடியாத | 31 |
சாணியைக் கொண்டு தரையை மிகமெழுகி பேணியே தூபமிட்டுப் பிள்ளையா ரைநிறுத்தி 32. சாணி - பசுவின் சாணம் | 32 |
வாசமலரும் மகிழருகும் தான் சார்த்தி நேசமிகும் தாம்பூலம் நிறைநாழி தானும்வைத்து 33. மகிழருகு - அருகம்புல் தாம்பூலம் - வெற்றிலை பாக்கு நிறைநாழி - மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி | 33 |
கடலைஅவல் பயறு கனிவகைகள் சர்க்கரையும் விடலையுயர் தரமிக்க வாழைப் பழமும் 34. விடலை - திண்ணிய | 34 |
மாம்பழம் பலாப்பழமும் வரிசையா கப்படைத்து சாம்பிராணி கற்பூரம் தாலத் திருவிளக்கும் | 35 |
தாம்பிரம் வெள்ளிபொன் குருதட்சனை தானும்வைத்து ஆம்பொருளான மத யானைமுகனைத் தொழுது | 36 |
சீராக வாத்தியார் செய்யபனை ஓலைதனை நேராகச் செப்பமிட்டு நிறைந்தமகு டம்பிடித்து 37. மகுடம் - தொடக்கத்தில் முழங்கும் பொருள் நிறைவுடைய சொற்கள், அறிவோம் நன்றாக என்பது போல. | 37 |
அரிஎன்ற எழுத்தை அப்போதி லேஎழுதி தெரியப் படுத்தி சித்தரியும் தானெழுதி 38. அரி - கல்வி தொடங்குமுன் அறிவோம் நன்றாக எனத் தொடங்குதலின் முன் எழுத்துக்கள்-அரி- திருமாலைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது | 38 |
கற்பகக் கன்றைக் கைதொழுது ஆதரித்து அற்புதமாய் மைந்தனையும் அருகிலே தானிருத்தி 39. கற்பகக் கன்று - ஆனைமுகன் | 39 |
கையைப் பிடித்து கதிபெறவே அண்ணாவி மெய்யாக அண்ணாவி மெய்ஞ்ஞான மேவழங்க 40. கதி - பேறு; மெய்ஞ்ஞானம் - உண்மைஅறிவு | 40 |
அரிவரி கொன்றைவேந்தன் அன்னையும் பிதாவுடனே விரிவான எண்சுவடி மிக்க உலகநீதி 41. அரிவரி - அகரமுதலாகக் கோவை செய்யப்பட்ட வரி வடிவ எழுத்துக்கள் | 41 |
பிள்ளையார் விருத்தம் பெரியஅவ்வை மூதுரையும் வள்ளுவமாலை வளம்குறள் நாலடியார் | 42 |
நல்லபொருளை நவிலும் திவாகரமும் சொல்லரிய நிகண்டும் சுப்பிரமண்யர் புகழும் 43. திவாகரம் - நிகண்டு. சேந்தன் எனும் அரசன் காலத்தில் திவாகர முனிவரால் இயற்றப்பட்டது. சுப்ரமண்யர் புகழ் - திருப்புகழ் | 43 |
நல்பிள்ளைத் தமிழும் ராசரிசி பாடல்களும் நல்ல புவியில் நலமுடனே எங்களுக்கு 44. ராசரிசி - ராஜரிசி - இளங்கோவடிகள் | 44 |
படிப்பித்தார் வேறுபல சாஸ்திரம் தன்னையும் படித்தோம்காண் மாதாவே பாருலகில் அண்ணாவி 45. சாஸ்திரம் - கலை நூல்; காண் - முன்னிலை அசை அண்ணாவி நெடியோன் - அண்ணாவியாகிய பெரியோன் | 45 |
நெடியோன் திருவருளால் நிமிடமிது தட்சணமே வடிவாக எண்ணெய்தனை வாங்கிவரச் சொன்னார்கள் 46. தட்சணம் - உடன் | 46 |
என்றறிந்து நாங்கள் இயம்பியசொல் தட்டாமல் சிந்தை மகிழ்ந்து திருத்தாள் கரம்குவித்து 47. திருத்தால் கரம் குவித்து - திருவடிகளைத் தொழுது | 47 |
சனி எண்ணெய்க் கென்று வந்தோம் தாயே சலியாதே இனிதான நல்லெண்ணெய் இலுப்பெண்ணெய் ஆனாலும் | 48 |
நான்கெண்ணெய் ஆனாலும் நறுநெய் ஆனாலும் மங்கெண்ணெய் முத்தெண்ணெய் பொதுவாய்ச் சேர்த்தெண்ணெய் | 49 |
எந்தநோ வானதுக்கும் எருக்கிடுமே வேப்பெண்ணெய்முதல் எந்தஎண்ணெய் ஆனாலும் இப்போதே விட்டனுப்பு 50. எருக்கிடும் - அழித்திடும் | 50 |
பேரம்மை சிற்றம்மை பெரியதாய் உடன்பிறந்தாள் அத்தைமகள் மதனி அன்பான மச்சினமார் 51. பேரம்மை - பெரிய தாய்; சிற்றம்மை - சிறிய தாய் மதனி - மைத்துனி | 51 |
இத்தனை பேரும் எமக்கிரங்கி எண்ணெய் தனைச் சித்தம் மகிழ்ந்து சீக்கிரமாய்த் தந்தனுப்பும் | 52 |
செல்லக் குமாரருங்கள் திண்ணையிலே வந்துநிற்க அல்லற்படுத் தாதேஎங்கள் அன்புடைய மாதாவே 53. அல்லல் - துன்பம் | 53 |
முத்துக் குமாரருங்கள் முத்தத்தில் வந்துநிற்க சித்தம் இரங்கிச் சீக்கிரத்தில் எண்ணெய்தனைத் 54. முத்தத்தில் - முற்றத்தில் | 54 |
தந்தனுப்பும் எங்களுக்குத் தாயேநீ மாதாவே மைந்தன் தனக்கிரங்கி வார்த்துவிடு எண்ணெய்தனை 55. வார்த்தல் - கொடுத்தல் | 55 |
பிள்ளை தனக்கிரங்கிப் பெற்றார் உதவிசெய்தால் கொள்ளை தவம்பெறுவீர் கொற்றவன்போல் வாழ்ந்திடுவீர் 56. கொள்ளை - மிகுதி கொற்றவன் - அரசன் | 56 |
அன்ன மணியே அருமையுள்ள மாதாவே சின்னஞ்சிறு பாலகர்மேல் சித்தம் இரங்கியன்பாய் | 57 |
மாதா மகிழ்ந்தெண்ணெய் வார்த்திடுவார் என்று சொல்லி ஆதலால் வந்தோம்காண் அன்னையரே நீர்கேளிர் காண் - முன்னிலை அசை | 58 |
சோதிதிரு அண்ணாவி சொன்ன மொழிதவறி நீதியுடனே நெடுநேர மான துண்டோ | 59 |
எங்களையும் அண்ணாவி எண்ணாம லேஅடிப்பார் பங்கய முகத்தழகு பவளவிதழ்த் தாய்மாரே 60. பங்கயம் - தாமரை | 60 |
நன்னயமாய் எண்ணெய்தனை நலமாகத் தந்தனுப்பும் இன்னமொரு சற்றுநேரஞ்சென்றால் எங்களையும் அண்ணாவி | 61 |
கோவித் திடுவார் கொடிப்பிரம் பாலடிப்பார் நாவூற நகட்டுவார் எங்க ளைத்தான் 62. நகட்டுவார் - நசுக்குவார் | 62 |
அல்லாமல் சட்டம்பிள்ளை அவன்கொடுமை சொல்லரிது செல்லப்பிள்ளை யானாலும் சினமே பொறுக்கறியான் 63. சட்டம்பிள்ளை - மாணவத்தலைவன் | 63 |
கோதண்ட ராமனிலே கூசாமல் போட்டிடுவான் மாதண்ட மாக வடுப்படவே தண்டிப்பான் 64. கோதண்டம் - பள்ளிச் சிறுவர் தண்டனையில் ஒன்று கோதண்டந் தன்னிலே என்றும் பாடம் வடுப்படவே - காயம்படவே | 64 |
முட்டுக்கண்ணி போட்டு முதுகில்கல் எடுத்திடுவான் கட்டியடிப்பான் கசையால் உரித்திடுவான் 65. கசையால் - சவுக்கால் | 65 |
தூதுளை விளாறுவெட்டித் துடிக்க அடித்திடுவான் மாதுளையம் கொம்பாலே மலர அடித்திடுவான் 66. தூதுளை விளாறு - தூதுவளை வளாறு | 66 |
குட்டிப் பிரம்பாலே எட்டி அடித்திடுவான் சட்டம்பிள்ளை துட்டனவன் சற்றும் இரக்கமில்லான் 67. துட்டன் - கொடியன் | 67 |
காணிகன் கையாலும் காசினியி லண்ணாவி தாணிகன் கையாலும் தானடியே பட்டுழன்று 68. தாணிகன் - உரிமை உடையவன் (ஸ்தாணிகன்) | 68 |
பிள்ளை நாங்கள் புலம்பி அழுகையிலே தள்ளைநீங்கள் கண்டால்தான் பொறுக்குமோ மனது 69. தள்ளை - தாய் | 69 |
ஆதலினால் நாங்கள் அவசரமாய்ப் போவதற்கு மாதாவே தாயே மனதிரங்கி யேயனுப்பும் | 70 |
வந்தோம் வெகுநேரம் வருத்தமிகக் காணுதம்மா தந்தை மனதிரங்கி தாய்மாரே நீங்களும்தான் | 71 |
நிறுத்திவிட்டுப் பாராதே நீதியில்லாத் தாய்மாரே சுறுதிதனில் அனுப்பும் சுகம்பெறுவீர் மாதாவே 72. சுறுதி - சுறுசுறுப்பு - விரைவு | 72 |
உந்தனுட வீட்டிலெண்ணெய் உண்டில்லை யானாலும் எந்த வீட்டிலானாலும் வாங்கிவிடு எண்ணெய்தனை 73. உந்தனுடைய - உன்தன் உடைய என்பதன் பேச்சுத் திரிபு | 73 |
உண்டான எண்ணெய் ஒருகரண்டி குறையாமல் கொண்டாந்து விட்டிடுவீர் கூர்மையுள்ள மாதாவே 74. கொண்டாந்து - கொண்டுவந்து என்பதன் பேச்சு வழக்கு | 74 |
பழஞ்சோ றுண்ணாமல் வயிறு கொதிக்குதம்மா குழைந்து விழுகுதம்மா கொவ்வையிதழ் மேனி யெல்லா 75. பழஞ்சோறு - நீரிட்டசோறு | 75 |
வேர்த்து நடுங்குதப்பா மெய்சோர்ந்து காணுதிப்போ ஆத்தில் நட்ட கோரைகள்போல் அலையுது சடலமெல்லாம் 76. ஆற்றில் நட்ட கோரை - அலைதலுக்கு உவமை | 76 |
திண்ணக்க மில்லாமல் தியங்குதே என்னுடம்பு அண்ணாவி தாமும் அடிப்பாரென் றென்மனது 77. திண்ணக்கம் - மனஉரம் | 77 |
உள்ளம் பதறுதம்மா ஒளிச்சுதான் போகவென்று கள்ளமனம் போலே கலங்குதம்மா உள்ளமெல்லாம் 78. ஒளிச்சு - ஒளிஞ்சு | 78 |
சட்டமெழுதித் தயவுடனே தான்கணக்கு திட்டம்தாய்ப் பார்க்கச் சிறுவர் தனக்கிரங்கி | 79 |
ஆத்தாள் எனப்பயின்ற அன்னையே எண்ணெய்தனை ...... ....... ...... ....... ...... ....... ...... ........ ........ ........ ...... ........ ...... ........ ........ ........ ...... ........ எண்ணெய்ச்சிந்து முற்றாகக் கிடைக்கப் பெறவில்லை நன்றி :-http://library.senthamil.org/097.htm |
0 comments:
Post a Comment