பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 1, 2014

தமிழ் வாழ வேண்டுமா ? பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1970



”தமிழ்  வாழ்க”  வென்பதிலும்  தமிழ்வா  ழாது;
தமிழ்ப்  பெயரை  வைப்பதிலும்  தமிழ்வா  ழாது!
குமிழ்  சிரிப்பைப்  பெருஞ்சிரிப்பாய்  அவிழ்த்துக் கொட்டுங்
கொக்கரிப்புப்  பேச்சாலுந்  தமிழ்  வாழாதே !
அமிழ்  கின்ற  நெஞ்  செல்லாம்;  குருதியெல்லாம்
ஆர்த்தெழும்  உள்  உணர்வெல்லாம்  குளிரு  மாறே
இமிழ்  கடல்சூழ்  உலகமெல்லாம்  விழாக்கொண்  டாடி
ஏற்றமிகச்  செய்வதிலும்  தமிழ்வா  ழாதே !


பட்டிமன்றம்  வைப்பதிலும்  தமிழ்வா  ழாது;
பாட்டரங்கம்  கேட்பதிலும்  தமிழ்வா  ழாது;
எட்டி  நின்றே  இலக்கியத்தில்  இரண்டோர்  பாட்டை
எடுத்துரைத்துச்  சுவைபடவே  முழக்கி  னாலும்,
தட்டி,  சுவர்,  தொடர்வண்டி,  உந்துவண்டி
தம்மிலெல்லாம்  “தமிழ்  தமிழ்”  என்றெழுதி  வைத்தே
முட்டிநின்று,  தலையுடைத்து  முழங்கி  னாலும்
மூடர்களே,  தமிழ்வாழப்  போவதில்லை !


செந்தமிழ்செய்  அறிஞர்களைப்  புரத்தல்  வேண்டும்;
செப்பமொடு  தூய  தமிழ்  வழங்கல்  வேண்டும்;
முந்தைவர  லாறறிந்து  தெளிதல்  வேண்டும்;
முக்கழக  உண்மையினைத்  தேர்தல்  வேண்டும்;
வந்தவர்செய்  தீங்குகளால்  தமிழர்க் குற்ற
வரலாற்று  வீழ்ச்சிகளை  எடுத்துக்  கூறி,
நொந்தவுளஞ்  செழித்ததுபோல்  புதிய  வையம்
நோக்கிநடை  யிடல்வேண்டும்!  தமிழ்தான்  வாழும்!


தண்டமிழில்  பிறமொழியைக்  கலந்து  பேசுந்
தரங்குறந்த  தமிழ்  வழக்கை  நீக்கல்  வேண்டும்!
தொண்டரெலாந்  தெருக்களிலே  கடைகள்  தோறும்
தொங்கு  கின்ற  பலகைகளை  மாற்றச்  சொல்லிக்
கண்டு  நிகர்  தமிழ்ப்  பெயர்பால்  புதுக்கல்  வேண்டும் !
கற்கின்ற  சுவடிகளில்,  செய்தித்  தாளில்,
விண்டுரைக்கா  அறிவியலில்,  கலையில்  எல்லாம்
விதைத்திடுதல்  வேண்டும்  தமிழ்;  வாழும்  அன்றே!

நன்றி :- கனிச்சாறு - தொகுதி - 1

தென்மொழி  பதிப்பகம், சென்னை - 600 100

94444 40449


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment