ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், கிராமப்புறப் பள்ளிகளைத் தத்தெடுப்பதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என ஆந்திர மாநில கல்வி அதிகாரிகள் குழு ஆலோசனை தெரிவித்தனர்.
புதிதாக உருவாகியுள்ள ஆந்திர மாநிலத்தில் உயர் கல்வித் துறையில் எந்தவிதமான மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது என்பதை திட்டமிடுவதற்காக, தமிழகம், கர்நாடகம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், ஆந்திர மாநில உயர் கல்வித் துறை சிறப்புச் செயலர் ஆர்.எம். தோப்ரியால், உயர் கல்வி கவுன்சில் துணைத் தலைவர் பி. விஜய பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு தமிழகத்தில் உயர் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்தினர்.
பின்னர், ஆந்திர உயர் கல்வி கவுன்சில் துணைத் தலைவர் பி. விஜய பிரகாஷ் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை நடைமுறைகள், வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு நடைமுறைகள், கல்வி உதவித் தொகைத் திட்டங்கள், பாடத் திட்டங்கள் என பல்வேறு விவரங்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளோம்.
உயர் கல்வித் துறை மேம்பாட்டுக்காக பல்வேறு சிறந்தத் திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம், முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரத்து போன்ற சிறந்தத் திட்டங்களை அறிமுகம் செய்து முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
இதுபோல் மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளை ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தத்தெடுப்பதை பல்கலைக்கழகம் கட்டாயமாக்கி, இந்தத் திட்டத்திலும் தமிழகம் முன்னோடி மாநிலம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
பி.எட். படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் ஆசிரியர் பயிற்சித் திட்டம் இருக்கும். அந்தப் பயிற்சித் திட்டத்தை, ஏதாவது ஒரு கிராமப்புற பள்ளியைத் தத்தெடுக்கச் செய்து அதில் பயிற்சிபெற வைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளும் இரண்டு பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும் என்றார் அவர்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment