தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக பாஜகவைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி அறிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேனகா காந்தி கூறியதாவது:
சமூகத்தில் பெண்களுக்குக்காகக் குரல் கொடுத்து வருபவரும், தலைமைப் பண்புகள் நிறைந்தவருமான பாஜகவைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலத்தை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யலாம் என்று பிரதமரும், நானும் விரும்பினோம். அந்த வகையில், இது அரசின் முடிவாகும். பெண்களின் தேவைகள், உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் லலிதா குமாரமங்கலம் செயல்படுவார் என்று முழுமையாக நம்புகிறேன்.
பொது இடங்களிலும், பணி இடத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பது, நோட்டீஸ் அனுப்புவது போன்ற அதிகாரங்கள் தேசிய மகளிர் ஆணையத்துக்குக் கிடைக்க வேண்டும். மத்திய அமைச்சர் என்ற முறையில் மகளிர் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் கேட்டு வலியுறுத்த எனது முயற்சி தொடரும்' என்றார் மேனகா காந்தி.
கட்சிப் பதவியில் இருந்து விலகுவாரா?: தேசிய மகளிர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லலிதா குமாரமங்கலம், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பொறுப்பில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து லலிதா குமாரமங்கலம் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது: "தேசிய மகளிர் ஆணையத் தலைவராக என்னை நியமனம் செய்து மத்திய அரசு பிறப்பித்த ஆணையை ஏற்றுக் கொண்டேன். தில்லிக்கு வியாழக்கிழமை சென்று பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோரைச் சந்திக்கவுள்ளேன்.
அவர்களின் அறிவுரைப்படி கட்சிப் பதவியில் நீடித்துக் கொண்டே ஆணையத்தின் தலைவர் பதவியைத் தொடருவதா? அல்லது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்வதா? என்று முடிவெடுப்பேன்' என்றார் அவர்.
நன்றி :தினமணி
0 comments:
Post a Comment