முரசே முழங்குக ! முரசே முழங்குக !
முரசே முழங்குக, நீ !
அரசே செந்தமிழ் அரசே வாழ்கென,
முரசே முழங்குக நீ !
சங்கே ஊதுக ! சங்கே ஊதுக !
சங்கே ஊதுக, நீ !
எங்கோ மூவர் ஏற்றிய தமிழெனச்
சங்கே ஊதுக, நீ !
பம்பை பம்புக ! பம்பை பம்புக !
பம்பை பம்புக, நீ !
எம்பைந் தமிழர சோச்சுக என்றே
பம்பைஒ பம்புக, நீ !
கொம்பே அலறுக ! கொம்பே அலறுக !
கொம்பே அலறுக நீ !
எம்பே ரிசைத் தமிழ் எங்கணும் முழங்கிடக்
கொம்பே அலறுக, நீ !
கரடிகை உறுமுக ! கரடிகை உறுமுக !
கரடிகை உறுமுக, நீ !
நெருடர் நுழைக்கும் வடமொழி விரட்டிடக்
கரடிகை உறுமுக, நீ !
முழவே முரலுக ! முழவே முரலுக !
முழவே முரலுக, நீ !
கழலணி மறவர்கள் விறல்பெற நடந்திட
முழவே முரலுக, நீ !
பறையே பிறங்குக ! பறையே பிறங்குக !
பறையே பிறங்குக, நீ !
பொறையே கொண்டவர் பொங்கிடில் தீதெனப்
பறையே பிறங்குக, நீ !
உறும்பே கறங்குக ! உறும்பே கறங்குக !
உறும்பே கறங்குக, நீ !
உறும்பே ரிடும்பினும் உணர்வுளோம் யாமென
உறும்பே கறங்குக, நீ ! - 1952
கனிச்சாறு -இரண்டாம் தொகுதி
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்
தென்மொழி பதிப்பகம்
செந்தமிழ் அடுக்ககம்
(சி.கே.அடுக்ககம் )
மேடவாக்கம் கூட்டுச்சாலை
மேடவாக்கம்
சென்னை - 600 100
-------------------------
94444 40449
0 comments:
Post a Comment