பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

கனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா ? - பாவலரேறு பெருஞ்சித்திரனார்



‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது:
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! !
தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது !
ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே
இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே !



பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது:
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:”
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும்,
தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !



செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்:
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்:
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்;
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி,,
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும் ! தமிழ்தான் வாழும் !



தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகள மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !
கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ்: வாழும் அன்றே ! -பாவலரேறு -1970

நன்றி :

தூய தமிழ்த் திங்களிதழ், தென்மொழி. ஆகஸ்டு 2014

--------------------------------------------------------94444 40449---------------------------------------------------------






Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

3 comments:

  1. அய்யா வணக்கம் எனக்கு பாவலரேறு அய்யா அவர்களினால் எழுதபட்ட திருமண வாழ்த்து பாடல்களை பரிந்துறைக்க முடியுமா நண்பரொருவரின் திருமண ஏற்பாட்டிற்கு தேவைப்படுகிறது

    ReplyDelete
  2. அற்புதமான உள்ளடக்கம்

    ReplyDelete