பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 1, 2014

சென்னையில் மாபெரும் நூலகம் -SUNDAY, AUGUST 17, 2008

photo (1)


பத்ரி சேஷாத்ரி 
bseshadri@gmail.com


பல நாள்களாக சொல்லிக்கொண்டிருந்த இந்த நூலகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் சிங்கப்பூர் நூலகத்துக்கு இணையாக இந்த நூலகம் கட்டப்படும் என்று பேசுகிறார்கள். நல்ல விஷயம்.

ஏற்கெனவே சென்னையில் இருக்கும் கன்னிமரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் ஆகியவையும், ஆங்காங்கே அமைந்திருக்கும் கிளை நூலகங்களும் எந்த அளவுக்கு உருப்படியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு அரசு சில புள்ளிவிவரங்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும். 
என் அலுவலகத்தில் சில நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கன்னிமரா நூலகத்தில், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை, யாருமே செல்லாத இடங்களில் ஒளித்துவைத்துவிட்டு பின்னர் எடுத்துவந்து படிப்பதாகச் சொன்னார்கள். இதனால் பிற வாசகர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு உண்டு என்பதை அவர்கள் அறிந்தார்களா என்று தெரியாது. நான் தேவநேயப் பாவாணர் நூலகத்துக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறேன். அங்குள்ள சூழல் அவ்வளவாகக் கவரவில்லை. அங்கும் இங்குமாக சில புத்தகங்களைத் தேடிப்பார்த்து, போரடித்து வெளியே வந்திருக்கிறேன். கன்னிமரா நூலகத்துக்கு ஒருமுறை மட்டுமே சென்றிருக்கிறேன். அது கொஞ்சம் தேவலாம்.

நூலகத்துக்கு மிக முக்கியமான தேவை நூலகர்(கள்). புத்தகத்தை ஆசை ஆசையாகச் சேர்க்கவேண்டும். அவற்றை ஒழுங்காக அடுக்கி, “கேடலாகிங்” செய்து, தேடும் புத்தகம் உடனடியாகக் கையில் கிடைக்குமாறு செய்யவேண்டும். சரியான படிப்பும் இல்லாமல் சுய ஆர்வமும் இல்லாமல் சாதாரண அரசு ஊழியராக வந்துசேரும் நூலக அலுவலர்கள் ஒரு நல்ல நூலகத்தை “கைமா” செய்துவிடுவார்கள். 120 கோடி ரூபாய் கோட்டூர்புரம் நூலகம் அவ்வாறு ஆகாமல் இருக்க வேண்டுவோம்.

முதல்வர் கருணாநிதி நேற்று பேசும்போது இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
தமிழகத்தில் மொத்தம் 3,924 பொது நூலகங்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நூலகங்களின் சிறப்பு, செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது. (தினமணி)

[நூலக ஆணைக்காக வாங்கப்படும் புத்தகங்களின் பிரதிகளை 1000-லிருந்து] 2000-க்கு உயர்த்துவதற்கு வெகு நேரம் ஆகாது. ஆனால் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நூலகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு உதவ முன்வரவேண்டும். (தி ஹிந்து)
நான் நாகப்பட்டினம் கிளை நூலகத்தில் உறுப்பினராக இருந்து எத்தனையோ புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த ஒரு நூலகம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஏற்கத்தக்க ஒரு நூலகமாக அது இருந்தது. தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் பல இருந்தன. ஒரு பள்ளி மாணவன் உறுப்பினராக முடிந்தது. புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கமுடிந்தது. ஆனால் இன்று தமிழகமெங்கும் உள்ள கிளை நூலகங்களின் நிலை மோசமாகியுள்ளடு என்று பலரிடம் பேசியதில் தெரியவந்தது.

சில எண்ணங்கள்:

1. தமிழக நூலகங்களின் எண்ணிக்கை வெகு அதிகம் என்று சொல்லமுடியாது. தமிழகம் போன்ற பெரிய மாநிலத்துக்கு 4,000 கிளை நூலகங்கள் போதா. 10,000 அல்லது அதற்கு மேற்பட்டு இருக்கவேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்படி பல பஞ்சாயத்துகளில் நூலகங்கள் உருவாக்குவதாகப் பேசினார்கள். அந்த நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதாகச் சொன்னார்கள். இன்றுவரை புத்தகங்கள் வாங்கப்படவில்லை. மூன்று நிதியாண்டுகள் ஓடிவிட்டன. நூலகங்களும் கட்டப்பட்டிருக்க மாட்டா என்றே நினைக்கிறேன்.

2. இருக்கும் நூலகங்களுக்கு கமிட்டி அமைத்து மொத்தமாகப் புத்தகங்கள் வாங்குவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இந்திய அரசியல், நிர்வாகத்தில் ஊழலுக்குப் பஞ்சம் இல்லை என்பதால் ஒரே இரவில் இந்த ஊழல்கள் காணாமல்போய்விடும் என்று நம்பமுடியாது. ஆனால் ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் இடையிலும் ஓரளவுக்காவது நல்ல நூல்கள் பல வாங்கப்படும் என்று நம்புவோம்.

ஒன்று செய்யலாம். மையமாக, அனைத்து நூலகங்களுக்கும் என்று சேர்த்துப் புத்தகங்களை வாங்குவதற்குபதில், கேரளத்தில் நடப்பதுபோல ஒவ்வொரு நூலகத்துக்கும் நிதி ஒதுக்கி, அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கவைக்கலாம். அப்போது, அந்தந்த நூலகங்கள் இருக்கும் பகுதிக்கேற்ப, அந்தந்த மக்கள் விரும்பும் நூல்களை வாங்குவது நடக்கக்கூடும். அந்தந்த வட்டார எழுத்தாளர்களது நூல்கள் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்பும் உண்டு. இந்த நூல்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் வாசகர்கள், நூலக உறுப்பினர்கள் சிலர் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஊழல் வெகுவாக அல்லது முற்றிலுமாகக் குறையலாம்.

3. கணினிமயமாக்கலும் இணையத்தில் படிக்கும் உரிமையும்: மொத்தம் 4,000 நூலகங்கள். அரசு அதிகபட்சம் 1,000 பிரதிகள் வாங்கும். என்றால், ஒரு நல்ல நூல் எந்தக் கட்டத்திலும் அனைத்து நூலகங்களிலும் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அரசு நூலகங்கள் அனைத்தையும் கணினி, இணைய இணைப்பு கொண்டு இணைத்து, நூலக மின் - புத்தக உரிமையை பதிப்பாளர்களிடம் பெற்று புத்தகங்களை வாசகர்களுக்கு அளிக்கலாம். குறைந்தபட்சம், தமிழில் பதிப்பாகும் அனைத்து நூல்களுக்கும் மின் - புத்தக உரிமையை கோட்டூர்புரம் நூலகத்துக்காகவாவது வாங்கலாம். இதன்மூலம் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெருத்த உதவி கிடைக்கும்.

4. நூலகங்களில் எந்தப் புத்தகம் படிக்கப்படுகிறது என்னும் புள்ளிவிவரம் மிகவும் உபயோகமானது. இதனைக்கொண்டு, அடுத்த ஆண்டு என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்று முடிவு செய்வது முக்கியமில்லை. ஆனால் இந்தத் தகவல், எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கேற்ப, ஒவ்வொரு நூலகத்திலும் பயனர் புத்தகத்தைப் பெறுவதையும் தருவதையும் கணினிமயமாக்கவேண்டும்.

5. சொத்துவரியில் நூலக மீவரி (cess) வசூலிக்கப்படுகிறது. இது முழுவதும் நூலக மேம்பாட்டுக்கு, புத்தகம் வாங்குவதற்கு என்று பயன்படுகிறதா என்றால் சந்தேகமே. இதைப்பற்றி தெளிவான விளக்கத்தை எந்த அமைச்சரும் தருவதில்லை. யாரும் கேட்பதும் இல்லை.

6. நூலகங்கள் அந்தந்த ஊரின், பகுதியின் எழுத்து மற்றும் படிப்பு சார்ந்த மையமாகத் திகழவேண்டும். ஆனால் நான் பார்த்த சில சிற்றூர்களில் பாதி நேரம் அந்த இடம் பூட்டப்பட்டுள்ளது. முக்கியமாக சிறு கிராமங்களில். அந்த ஊரின் மக்கள் அந்த இடத்தின்மீது அதிகமான உரிமை கொண்டாடவேண்டும். இது எப்படி நடக்கும் என்பது எனக்குப் புரியவில்லை.

***

இந்த நிலையில் முதல்வர், எந்த விதத்தில் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நூலகங்களின் செயல்பாட்டை முன்னேற்றமுடியும் என்று நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக நூலகங்களில் முதலில் வாசகர்களேகூட ஒரு பங்குதாரராகக் கருதப்படவில்லை. ஒரு வாசகராக, ஓர் உறுப்பினராக, என்ன புத்தகங்கள் வேண்டும், வரவு என்ன, செலவு என்ன என்று கேட்கும் உரிமை என்னிடம் இல்லை. எழுத்தாளருக்கும் நூலகத்துறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதில்லை. எழுத்தாளரே சொந்தமாகப் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, ஒரு பதிப்பாளராகவே நூலகத்துறையை அணுகுகிறார். ஆணை கிடைத்தால் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவ்வளவுதான்!

இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால், வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரை அரசுடன் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும். ஒவ்வொரு பகுதியின் நூலக வளர்ச்சியில் இவர்களைப் பங்குகொள்ளச் செய்யவேண்டும்.

முதல் கட்டமாக நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதை “decentralise” செய்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியான குழுக்கள் அமைக்கலாம். அப்போது அந்தக் குழுக்களில் வாசகர்கள், அந்தப் பகுதியின் எழுத்தாளர்கள், ஓரிரண்டு பதிப்பாளர்கள் ஆகியோரை உறுப்பினராக்கலாம். மொத்தம் 10 பேர் கொண்ட குழு என்றால், 2 நூலக அதிகாரிகள், 2 வாசகர்கள், 2 எழுத்தாளர்கள், 2 கல்வியாளர்கள், 2 பதிப்பாளர்கள் என்று இருக்கலாம்.

***

மற்றொரு பக்கம், பொதுமக்களாகச் சேர்ந்து அரசு சாராத நூலக வளர்ச்சியில் ஈடுபடலாம்.

கிழக்கு பதிப்பகம் சார்பாக மயிலாடுதுறை பக்கம் சில கிராமங்களில் (5-6 இடங்கள் இருக்கும்) ஒரு முயற்சியில் ஈடுபட்டோம். அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. எங்களது புத்தகங்கள் அனைத்திலும் சில பிரதிகளைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு அந்த கிராமங்களில் நூலகம் ஒன்றை நடத்துவதுதான் நோக்கம். இந்த நூலகத்தைப் பயன்படுத்தக் கட்டணம் உண்டு. வருமானத்தில் பெரும்பான்மை நூலகத்தை நடத்துபவருக்கும், சிறு பங்கு எங்களுக்கும் வருவதாகக் கணக்கு. என்ன கட்டணம் வசூலிக்கவேண்டும் என்பதை அந்தந்த கிராமத்தில் நூலகத்தை நடத்துபவர் முடிவுசெய்துகொள்வார். ஆனால் இது ஆரம்பம் முதலே சரியாக நடக்கவில்லை. மிகக் குறைந்த கட்டணம்தான் வைக்கவேண்டும் என்பது எனது கொள்கை. ஒரு பயனருக்கு, மாதத்துக்கு 5 ரூபாய்க்குமேல் போகக்கூடாது என்றேன் நான். ஆனால் அதை அவர்கள் கேட்பதாக இல்லை.

கடைசியில், ஒழுங்காக நடத்தமுடியாமல், வருமானம் வராமல், புத்தகங்களையெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டனர்.

மீண்டும் வேறு இடத்தில், வேறு வடிவில் இந்த பைலட் சோதனையை நடத்திப் பார்க்கவேண்டும்.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment