ஊரைத் திருத்துமுன், உ;லகைத் திருத்துமுன்
உன்னைத் திருத்தடா தமிழா - நீ
உன்னைத் திருத்தடா தமிழா !
பாரைத் திருத்திடல் நல்ல முயற்சியே !
பாட்டனும் பூட்டனும் செய்த முயற்சியே !
யாரைத் திருத்தினர்; யாது வளர்ச்சியே ?
யாங்கணும் யாங்கணும் வாழ்க்கை தளர்ச்சியே !
வேரைத் திருத்துதல் பயனளித்திடலாம் !
வினையைத் திருத்திடும் முயற்சியோ சுடலாம் !
கூரை திருத்தினால் நிற்குமோ சுவரே ?
குழியைத் திருத்தாமல் இருப்பது தவறே !
உலகைத் திருத்திட வலம் வருகின்றாய் !
உன்னைத் திருத்தெனில் உள்ளம்நோ கின்றாய் !
அலகிலா முயற்சிகள் அறங்கள். சட்டங்கள்
ஆரைத் திருத்தின? பணயம்கட் டுங்கள் !
ஆயிரம் ஆண்டுக்கு முன்னும் இருந்தனர்:
அம்மண மாகவே உண்டு திரிந்தனர்;
ஏயின திருத்தங்கள் என்னென்ன கண்டாய்?
எழிலுடை ! தலைமயிர் ! மற்றென்ன விண்டாய்?
வெள்ளுடை மேனியில் புரள்வதோ நேர்மை ?
விஒரிமயிர் வாளி முடித்தலோ சீர்மை ?
உள்ளத்துள் கள்ளமும் கரவும் கிடப்பதா ?
ஊரினை ஏமாற்றி, மறைந்தே நடப்பதா ?
பொத்குமையைக் காணாத உளம்என்ன உளமோ ?
பூசலை விலைத்திடும் வளமென்ன வளமோ?
புதுமைஎன் றுரைப்பது செல்வர்க்குச் செழிப்பு
போக்கற்ற ஏழையர்க் கேதுஅதால் விழிப்பு ?
மன்றங்கள் எத்தனை ? எத்தனைக் கோயில் ?
மடிபவர் எத்தனைப் பேர் தீமை நோயில் ?
இன்றைக்கும் நேற்றைக்கும் வேற்றுமை யாது ?
இழிவினை, அழகினால் மூடலன் றேது ?
கல்வியும் செல்வமும் ஓங்குதல் மேலோ ?
கணக்கிலா இழிவுகள் குவிதலெப் பாலோ ?
சொல்,வினை உளத்தோடு பொருந்துதல் வாழ்வே !
சொக்கட்டான் காய்போல் உருளுதல் தாழ்வே !
கனிச்சாறு - தொகுதி -4
தென்மொழி பதிப்பகம்
மேடவாக்கம் கூட்டுச்சாலை
மேடவாக்கம், சென்னை - 600 100
--------------------------------------------------
94444 40449
0 comments:
Post a Comment