பூச்சி விழுந்த மதுபானத்தை விற்றதற்காக மதுபான நிறுவனம், டாஸ்மாக் வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜி.ரமேஷ். இவர், கடந்த 2012 ஏப்ரல் 8-ஆம் தேதி, தண்டையார்பேட்டை, டி.எச். சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ரூ.400-க்கு ஜேடிஎஃப் பிராந்தியை வாங்கி உள்ளார். அதில் சிதைந்த நிலையில் பூச்சி மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அதன் உரிமையாளர் நிறுவனமான "யுனைடெட் ஸ்பிரிட்ஸ்' நிறுவனத்தின் பகுதி விற்பனை மேலாளர், குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் மேலாளர் ஆகியோரிடம் ரூ.5 லட்சம் நஷ்டஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மனுவை விசாரித்த சென்னை(வடக்கு) மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கோபால், உறுப்பினர்கள் தயாளன், கலையரசி ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு: மனுதாரர் வாங்கிய மதுபாட்டிலுக்குள் சிதைந்த நிலையில் பூச்சி இருந்தது விசாரணையில் தெரியவருகிறது. அந்த மதுவை மனுதாரரோ, வேறு நபர்களோ குடித்திருந்தால் உடல்நல கேடு ஏற்பட்டிருக்கும். சேவை குறைபாடாக செயல்பட்டுள்ளதற்காக, வழக்கில் சம்பந்தப்பட்ட மதுபான உரிமையாளர் நிறுவனம், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடும், ரூ.5,000 வழக்கு செலவும் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ; தினமணி
0 comments:
Post a Comment