பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 18, 2014

முதலமைச்சர் கடும் தாக்கு



சென்னை, செப்.18: 2011-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்ற போது கேந்திரிய இந்தி சமிதி எடுத்த முடிவுகளை எதிர்த்தால் தனது மகள் கனிமொழி ஜாமீனில் வெளிவர முடியாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்காமல் கருணாநிதி தமிழ் மொழியையே அடமானம் வைத்தது அம்பலமாகி இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
.
இது குறித்து அவர் இன்று வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் 16.9.2014 அன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும் போது,  அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30-வது கூட்டம் 28.7.2011 அன்று அன்றைய பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றதும், அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது.

28.7.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் அல்லது இந்தி படித்து பட்டம் பெறுகின்றனர் என்றும், இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாட்டிற்கு தேவையான மொழி பெயர்க்கும் திறன் அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்து; குஜராத்தில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் படிப்பதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளின்படி, சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. 

இதிலிருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி 28.7.2011 அன்று எடுத்த முடிவுகள் தான் என்பது தெரிய வருகிறது.  அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி தி.மு.க.  இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்த போது வாய் திறக்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போது டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது,  இந்தி மொழி பற்றி கூறினால் கனிமொழி ஜாமீனில் வெளிவர முடியாது என்று பயந்து வாய்மூடி மவுனியாக இருந்தவர், இன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டைத் தான் எடுத்துக் காட்டுகிறது.  இதிலிருந்து, கனிமொழிக்காக தமிழ் மொழியை கருணாநிதி அடமானம் வைத்தது அம்பலமாகி உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரையில், இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது.
1963 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தில், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்த வரையில், மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட 1976 ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் (மத்திய அரசின் அலுவலகப் பயன்பாடு) விதிகளின்படி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் மண்டலம் பி-ன்  என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன.  மண்டலம் பி-ன் கீழ் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் சாதாரணமாக இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அத்துடன் இந்தி மொழி பெயர்ப்பும் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் மண்டலம் சி என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. “மண்டலம் சி-ன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.  எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது.

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்;

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கற்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கும் புறம்பானது ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும் என்பதையும்; 28.7.2011 அன்று நடைபெற்ற கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் பல்கலைக்கழக மானியக் குழு விற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல் கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி :  மாலைச்சுடர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment