பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 27, 2015

யாழ் நூலகம்


யாழ் நூல் நிலையத்தின் அடிக் கல் 29 பங்குனி 1955 இடப்பட்டு 1958 ல் கட்டப்படத் தொடங்கியது. 1960 ல் கட்டி முடிக்கப்பட்டது. “மோகுள்” வடிவமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. 1981 ல் அழிவுக்குட்படுத்தப்பட்டது. இதன் போது 97000 புத்தகங்கள் எரியூட்டப்பட்டன. மீண்டும் 2003 ஆம் ஆண்டு மாசி மாதம் ஆரம்பிக்கப்படும் போது 30000 புத்தகங்கள் காணப்பட்டன.

பதிப்பாசிரியர்



     சி. சுதர்சன்

கோவிற்கடவை சனசமூக நிலையம்

கோவிற்கடவை சனசமூக நிலையம்

கோயிற்கடவைகோவிற்கடவை சனசமூக நிலையம் ஆனது 1.01.1979 இல் நிலையான இடத்திலிருந்து செயற்பாடுகளை ஆரம்பித்து இன்று இருபத்தைந்து ஆண்டுகள் புர்த்தியடைந்த நிலையில் தனது சேவையால் முன்னோக்கிய திசையில் வளர்ச்சிகண்டு வருகிறது.
வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வாழ்க்கைத் தடைகளை உடைத்தெறியும் மறுமலர்ச்சிக்கும் மனித விடுதலைக்கும் அடித்தளம் அமைப்பது கல்வியே ஆகும். அனைவருக்கும் கல்வி என்றும் பொருள்மிகு தாரக மந்திரத்தின் அடிப்படையில் இக் கிராம சிறார்களின் ஏற்றமிகு கல்வியையும், மக்களின் வளர்ச்சியையும் நோக்காக கொண்ட கோவிற்கடவை சன சமூகநிலையத்தின் வரலாறு பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகும்
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற ஒளவை மூதாட்டியின அறிவுரைக்கமைய எமது முன்னோர்களின் எமது ஊரில் கோயிலைக் கட்டினார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களால் 1942ம் ஆண்டு சமூக மேம்பாடு கருதி சமுக அமைப்பு என்ற எண்ணக்கரு உதையமாயிற்று அதன் முலம் கிராம முன்னேற்ற சங்கம், நூலகம், மாதர்சங்கம், என்பன உருவாக்கப்பட்டு அவை காலத்திற்கு காலம் பல்வேறு சேவைகளை ஆற்றிவந்தது. அதன் பின் 1968ம் ஆண்டுளின் முன்பகுதிகளில் வீரபத்திரர் ஆலயத்தின் அண்மையில் இவ் ஊர் அன்றைய இளைஞர்களினால் சேர்ந்து கிடுகினால் அமைக்கப்பட்டு கொட்டகையில் சனசமூக நிலையத்தை ஆரம்பித்தார்கள். அதன்பின் அமரர் ஞானபிரகாசம் அவர்களின் விடா முயற்சியாலும் சேவையாலும் எமது ஆலய பிரதமகுரு கணேசகுருக்கள் அவர்களின் தந்தையாராகிய ஆறுமுகஜயாவின் பெருமனதினால் ஆலய முன்றலில் அமைந்துள்ள அவரது காணியில் இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட தொடங்கியது. இக்காலப்பகுதியில் அமரர் ஞானபிரகாசம் அவர்கள் இந்நிலையத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்கள்.அவரின் திடீர் மறைவுக்குபின் நிலையத்தின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.
கோவிற்கடவை
1974ம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் திரு. பொன்னையா வரதராஜன் தலைமையில் அதே கட்டடத்தில் முனைப்புடன் இயங்கத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரு. சிதம்பரப்பிள்ளை சச்சிதானந்தம் தலைவராகவும் திரு. மயில்வாகனம் மகேஸ்வரன் செயலாளராகவும் கடமையாற்றிய காலப்பகுதியில் இந் நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் அமைக்க வேண்டும் என்ற இளைஞர்களின் அவாவினாலும் விடாமுயர்ச்சியாலும் கடும் உழைப்பினாலும் திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களின் தலைமையிலான ஆலய நிர்வாக சபையினரின் ஆதரவுடன் தற்போது உங்கள் முன் காட்சியளித்துக் கொணடிருக்கின்ற கட்டடத்திற்கான அடிக்கல் 1975ம் ஆண்டின் நடுப்பகுதியில் திரு.இளையகுட்டியப்பா அவர்களால் நாட்டப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் பணவசதி இருக்கவில்லை. மக்கள் வழங்கிய நிதியுதவியுடனும் இளைஞர்களின் கடும் உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் இக் கட்டிடம் வளரதொடங்கியது. இக்கட்டடத்திற்கான கற்கள் இவ் ஊர் இளைஞர்கள் சேர்ந்து நிலத்தினுள் உள்ள கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டதும் மற்றும் இப் பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்பட்டவையாகும். இக் கட்டிட வேலைகளை நிறைவேற்றுவதற்காக எம்மக்களிடம் நிதி கேட்டு நாடிச்சென்ற போது திரு. சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்கள் கூரைக்குத் தேவையான சீற் தகடுகளையும், திரு.பொன்னையா மயில்வாகனம் அவர்கள் கூரைக்குரிய மரங்களையும் தந்து பெருமனதுடன் உதவினார்கள். இளைஞர்களின் முயற்சியால் எண்பது சதவீதமான வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டன. அரச நிதியுடன் மிகுதி வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டது.
கோவிற்கடவை
01.01.1979 முதல் திரு. பொ. மயில்வாகனம் அவர்கள் தலைவராகவும் திரு.ஸ்ரீசந்திரன் அவர்கள் செயலாளராகவும் கொண்ட நிர்வாகசபையினால் இந்த கட்டடத்திலிருந்து தனது சேவையை வழங்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து வந்த நிர்வாக சபைகளினால் நிலையத்தின் செயற்பாடுகளை படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. நாட்டின் ஏற்பட்ட அரசியல் இராணுவ நடவடிக்கைகளினாலும், 1987ம் ஆண்டிலிருந்து பல இடையுறுகளையும் பின்னடைவுகளையும் சந்திக்க வேண்டியேற்பட்டது. ஆனாலும் தனது சேவையை வழங்கி கொண்டு இருந்தது. 2000ம் ஆண்டின் இறுதியில் மக்களின் உதவியுடன் இளைஞர்களின் அர்பணிப்புடனான சேவையினாலும் இந்நிலையமானது மீண்டும் புணரமைக்கப்பட்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற  உறவுகளின் ஆதரவுடன் தனது பன்முகப்படுத்தப்பட்ட சேவையை மீண்டும் உத்வேகத்துடன் வழங்க ஆரம்பித்துள்ளது.
நூல் நிலையத்தின் தேவை கருதி ருபா 35000 பெறுமதியான தளபாடங்கள் செய்யப்பட்டன. மாணவர்களினதும் வாசகர்களினதும் வாசிப்பு, கல்வி தேவைகளை வழங்குவதற்காக நூலக இரவல் வழங்கும் பகுதி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தேவையான நூல்கள் மூன்று கட்டங்களாக ருபா 65000 இற்கு வாங்கப்பட்டது. அத்துடன் இந்த நிலையத்தை சார்ந்தவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன. தினசரி பத்திரிகைகள் போடுவதற்கும் நூல்கள் இரவல் வழங்கும் பகுதிக்கும் பொறுப்பாக செல்வன் வி.கஜயதாஸ், செல்வன் க.விபுட்சன் இருவரும் நியமிக்கப்பட்டனர். இவ் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நூலகபொறுப்பாளராக செல்வி.ரேவிகா சண்முகநாதன் செயற்பட்டுவருகிறார். இப்பொழுது வாரத்தில் ஒருநாள் மட்டும் செயற்படும் இரவல் வழங்கும் பகுதியை மாணவர்களின் நலன் கருதி இரண்டு நாட்கள் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்கள். மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் 2001ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மாணவர்களிடையே அவர்களின் ஆற்றல்கள் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கல்வி கலை கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கியும் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை, க.பொ..த (சா த) பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படுகினறன. மேலும் க.பொ.த (உ த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை ஊக்கிவிக்கும் முகமாக பரிசில்கள் (பணத்தொகை) வழங்கி வருகின்றார்கள். பரிசளிப்பு விழாவிற்கான நிதியினைப்பெறும் நோக்கில் தேசிய சேமிப்பு வங்கியில் (பருத்தித்துறை) சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார்கள்

மாணவர்களுடைய ஆங்கில, கணித, விஞ்ஞான, பாட அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் இந்நிலைய அணுசரணையுடன் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ் வகுப்புக்களை நடாத்துவதற்கு தேவையான தளபாடங்களை வழங்கி ஆதரவளித்த ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான பரிபாலனர் சபையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றார்கள். இந்நிலையம் 25 வருடஆணடு பூர்த்தியடைந்ததை முன்னிட்டு கட்டடம், தளபாடங்கள் என்பவற்றுக்கு வர்ணம் பூசுவதற்கு நிதியுதவி வழங்கியும் வர்ணபூச்சு வேலைகளில் ஈடுபடும் தமது பங்களிப்பை வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் பாரட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றார்கள். கடந்து வந்த பாதையை திரும்பிபார்க்கும் போது பொறியியலார்கள், மருத்துவர்கள், விஞ்ஞான, கணித, வர்த்தகபட்டதாரிகள், அரச உயர்அதிகாரிகள், ஆசிரியர்கள், வங்கியாளர்கள், என நாடளாவிய ரீதியில் பல சிறப்புமிகு பதவிகளிலும், இக்கிராமத்தின் புதல்வர்கள் பணியாற்றி வருகின்றார்கள். உலகின் பல முனைகளிலும் உன்னதமான நிலைகளில் பலர் உள்ளனர்.
பொது வேலைத்திட்டம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இப்பகுதி வீதிகள் சிரமதானம் முலம் துப்பரவுசெய்யப்பட்டு பிரதேசசபை மூலம் செப்பனிடப்பட்டது. ஆலயத்தின் திருப்பணி வேலைகளிலும் சிரமதான வேலைகளிலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறது.
வறுமைகோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் நிலைமைகருதி அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. எமது பிரதேசத்தில் அமைந்துள்ள மயானம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. இராணுவ நடவெடிக்கைகளினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கான ஆதரவும் உதவியும் வழங்கப்பட்டது. ஆலயத்திற்கும் நூல்நிலையத்துக்குமான சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
By -‘[googleplusauthor]’
நன்றி- மூலம் -கோவிற்கடவை இணையம் http://www.ourjaffna.com/

பதிப்பாசிரியர்

     சி. சுதர்சன்

அனலைதீவு நூலகம்

கல்வி என்னும் ஒளிவிளக்கை ஏற்றிவைக்கும் சமுதாயத்தில் அறியாமை என்னும் இருள் விலகிநிற்கும். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகளைக் கூட ஏற்றலாம். அவ்விதமே ஒருவர் பெறும் கல்வியானது அவருக்கு மட்டுமன்றி முழுச்சமூகத்திற்குமே நன்மைகளை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் தான் ‘அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலிலும் பார்க்க ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது உத்தமம்’ என்று அறிஞர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
கற்றறிந்தவனுக்கு தன் ஊரில் மட்டுமன்றிச் சென்ற ஊர்களிலெல்லாம் சிறப்புகள் ஏற்படும் என்று திறந்த நிலைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கல்வி என்னும் பெருஞ்செல்வத்தைப் பெறுவதற்காக அக்காலத்திலிருந்து இக்காலம் வரை பல்வேறு சாதனங்களை மனிதன் உருவாக்கியுள்ளான்.
குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்று ஏனைய கோள்களிலும் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி வரை முன்னேறியுள்ளான். குகைகளில் கோடுகள், குறியீடுகள் எனத் தொடங்கிய எழுத்துப்பயணம் கணனி மொழிகள் வரை பல்வேறு ஊடகங்களினூடாக சென்று கொண்டிருக்கிறது. எண்ணங்களை, அனுபவங்களை, கண்டுபிடிப்புக்களை அடுத்தவருக்கு கூறப்பயன்படுத்திய சாதனங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல்வேறு காரணங்களால் அழிவடையக் கூடியனவாக இருந்தாலும் பெறப்பட்ட அறிவை அடுத்தவருக்கு வழங்கும் செயற்பாடு நின்றுவிடாமல் தொடர்கின்றது.
வரிவடிவக் கல்வி, வாய்மொழிக் கல்வி என்னும் வரிசையில் பல்வேறு சாதனங்கள் கல், களிமண், தோல்கள், பலகைகள், இலைகள், புல்வகைகள், உலோகத்தகடுகள் எனப் பதிவுகளை மேற்கொள்ளப் பயன்பட்டன. அச்சுயற்திரம், காகிதம் என்பவற்றின் கண்டுபிடிப்புகளின் பின் நூல்கள் உருவாகின.
இந்நூல்களினூடாக ஒரே சமயத்தில் பலரும் பல இடங்களிலும் அறிவைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகியது. நூல்கள் பெருகப்பெருக அவற்றை பெற்று பயன்படுத்தியவர்கள் அதனை பேணிப் பாதுகாக்கத் தலைப்பட, நூலகங்கள் என்னும் புதிய சிந்தனையும் பிறந்தது. சமயநிறுவனங்கள் தொடங்கி கல்விநிறுவனங்கள் வரை நூலகத்தின் செல்வாக்கு விரிவுபட்டது.
கற்பதற்கு நூல்களின் அவசியம் உணரப்பட, கற்பவர் தொகையும் அதிகரிக்க நூல்கள் பலதுறைகளிலும் வெளிவரலாயின. எல்லோருக்கும் எல்லா நூல்களும் கிடைக்க வாய்ப்பிருக்காது. நூல்களின் வியாபகம், பரவல்இ என்பவற்றுடன் அதன் உற்பத்தி செலவுகளுக்கான விலையும் சம்பந்தப்பட்டுள்ளது. இலவசமாகக் சிடைக்கும் வாய்ப்பிருந்தால் சகலருக்கும் பயன்படும் என்ற நிலை உருவாக நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளினூடாக நூலக சேவைகள் வழங்கப்படும் வழக்கம் மேல்நாடுகளில் ஆரம்பமாகியது.
குருகுலக்கல்வி முறை நிலவிய காலத்திலும் கல்வி கற்பிக்கும் பணிக்காகவே உருவாகியுள்ள கல்வி நிறுவன முறையுடைய இக்காலத்திலும் கற்பித்தலுக்கும் கற்பித்தலுக்குமான ஏடுகள், நூல்கள் என்பன அப்பணியில் ஈடுபடுவோருக்கு எளிதில் கிடைத்தல் வேண்டும். இதற்கான சகல சாத்தியப்பாடுகளையும் உடைய நிறுவங்களாக நூலகங்கள் அமைகின்றன. திண்ணைப்பள்ளிகள் மூலமும் குரு சிஷ்ய முறையிலும் அறிவின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டாலும் ஒருவன் தானே அவற்றை உள்வாங்கி விருத்தி செய்வதன் ஊடாகவே கல்வியின் பயனைப் பெறமுடியும்.
இலங்கையில் மேனாட்டாரின் வருகையுடன் அச்சுயந்திரம், கல்விமுறைமைகள், நூல்கள் என்பன அறிமுகமாயின. கல்வி ஒரு சிலரின் சொத்தாகவே விளங்கிய காலகட்டத்தில் மேனாட்டாரின் முயற்சிகள் முழு இலங்கையிலும் கல்வியைப் பெறவேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. சமயத்தின் ஊடாகவும் சமூகத்தின் பல நிலைப்பட்டவர்களிடையே மேனாட்டாரின் பணிகள் ஊடுருவின. இனி நாட்டின் தேசிய இனங்களிடையே மேனாட்டவரின் கல்வி நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் பெரும் புரட்சியை உருவாக்கின. தமது மொழி, சமயம், கலாசாரத்தன்மை இவற்றில் குறுக்கீடு செய்த செயல்களினை ஒரு காலகட்டத்தில் பொறுக்க முடியாதநிலை உருவாகியது.
மேனாட்டார் செய்த சமயப் பிரச்சார உத்திகள் கல்வி நிறுவன அமைப்புகள் போன்று சுதேச மக்களாகிய அறிஞர்கள், செல்வந்தர்கள், ஆன்மீகவாதிகள் ஆரம்பித்தனர். அவ்வகையில், மேனாட்டாரால் ஆரம்பிக்கப்பட்ட கல்விநிறுவனங்களைப் போன்று சுதேசமக்களும் ஆர்வங் காரணமாகவும், ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும் ஆரம்பித்தனர். இதன் மூலம் காலப்போக்கில் ‘அனைவருக்கும் கல்வி’ என்னும் சாத்தியப்பாடு தோன்றலாயிற்று.
அரசாங்கங்களும் காலத்துக்கு காலம் வழங்கிய உதவிகளையும் நன்கொடைகளையும் விரிவுபடுத்தி அரச நிருவாகக் கட்டமைப்புக்களை கல்விசார்ந்து நிறுவலாயிற்று. கற்றவர் தொகை அதிகரித்ததன் பேரில் நூல்களின் பாவனையும் வாசிப்பு கலாச்சாரமும் மேம்படலாயின. கல்விநிறுவனங்கள், சமயநிறுவனங்கள் மட்டுமன்றி தனிநபர்களும் நூல்களைச் சேகரித்து பாதுகாக்கத் தலைப்பட்டனர். தனிநபர்களின் சேகரிப்புகள் அவர்களுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் பயன்பட்டன. சிலர் அவர்களிடம் பெற்றுப்பயன்படுத்துவதன் மூலம் வாசிப்பின் அனுபவத்தைப் பெறலாயினர்.
இதே சமயம் இலங்கையிலும் இந்தியாவிலும் பலவிதமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் உருவாயின. நாளாந்தம் நடைபெறும் உலகவிடயங்களை அறிதல் என்பதை நாளாந்தக் கடமையாக்குகின்ற முறை உருவாகியது. உலகயுத்தங்களின் தகவல்கள், நாட்டுக்கு நாடு அபிவிருத்திக்கான சிந்தனைகள் உலகநாடுகளை ஒன்றாக இணைக்கத் துணையாயின. ஏற்கனவே பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஏனைய கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நூலகங்கள் அத்துறை சார்ந்தவர்களுக்குப் பயன்பட்டு வந்தன. இலங்கையில் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக பொதுசன நூலகங்களை அமைக்கத் தலைப்பட்டது.
வாய்ப்புகளின் வரலாறு அனலைதீவில் 1850களின் பின் கல்விக்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. அமெரிக்க மிஷனரிகள் அக்கால யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பாகங்களிலும் சமயநிறுவனங்களையும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கியிருந்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அனுசரணையும் இருந்தமையால் தமிழ்மொழி சார்ந்து பல்வேறு இலக்கிய முயற்சிகள், அகராதித் தொகுப்புப் பணிகள், சுவடிகளைத் தேடி பாதுகாத்தலும் அவற்றினை நூல்களாக அச்சிடுதலும் உரைகள் வெளியிடுதலும் என இலக்கிய முயற்சிகளில் பேரார்வம் விளங்கிய காலமாக அமைந்தது.
ஆறுமுகநாவலரின் கல்விப்பணிகள், சமயப்பணிகள், சமூகப்பணிகள் என்பன இலங்கையிலும், தென் இந்தியாவிலும் வரவேற்பைப் பெற்று அவரின் வழிகாட்டுதல்களையேற்று பல அறிஞர்கள் கல்விப்பணி, சமயப்பணி என்பவற்றை மேற்கொள்ளத் தொடங்கினர்.
அனலைதீவு நூலகம்அவ் வகையில் உயர்திரு. சின்னப்பா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சதாசிவ வித்தியாசாலை அதுவும் கடல் சூழ்ந்த நிலையில் பல வசதியீனங்களைக் கொண்டமைந்திருக்கக்கூடிய கிராம மட்டத்தில் பெருந் தாக்கத்தை உருவாக்கத் தொடங்கியது.
கற்பதற்கான வாய்ப்புத் தேடி வந்திருந்த நிலையில் அதனைப் பயன்படுத்த முற்பட்டவர்களால் தீவில் கற்போர் வீதம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் வாசிப்பின் தேவையும் உணரப்பட்டது. அக்காலத்தில் சமய உண்மைகள் பேச்சு வடிவில், சொற்பொழிவுகள், உபந்நியாசங்களாக நிகழ்த்தப்பட்டன. புராணபடனம் என்னும் வடிவம் ஆறுமுகநாவலரால் ஆலயந்தோறும் நிகழ்த்துவதற்கான வகையில் செயற்படுத்தப்பட்டன. இதனூடாக பல சமய உண்மைகள், நல்ல பழக்கவழக்கங்கள், இறைவன்பால் பக்தி செலுத்திய அடியார்களின் வரலாறுகள் எடுத்துரைக்கப்பட்டன. இதனைப் பாட்டும் உரையுமாக மாறிமாறி எடுத்துரைக்கப்படும். ஆலயச் சூழலில் இவை நிகழ்த்தப்பட்டன. இதேபோல் சமய உண்மைகளையும் இலக்கிய விடயங்களையும் கொண்ட பல நூல்களை ஆறுமுகநாவலர் போன்ற பல பெரியார்கள் எழுதிவெளியிட்டனர்.
இந்துசாதனம், சத்தியவேத பாதுகாவலர், உதயதாரகை போன்ற மூன்று நூற்றாண்டுகளுடன் தொடர்புபட்ட பத்திரிகைகள் வெளிவந்தன். இலங்கையிலிருந்து வீரகேசரி, தினகரன் உட்பட பல தேசிய பத்திரிகைகள் வெளிவந்தன. இவ்வாறான பத்திரிகைகள், சஞ்சிகைகள் படிக்கும் ஆர்வம் கிராம மக்களிடையே தோன்றியது. அனலைதீவு சதாசிவ ஆங்கில பாடசாலைக்கு அருகில் மத்திய வாசிகசாலை ( சனசமூக நிலையமும்), அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் தெற்கு வாசிகசாலையும், வடக்கு அ.த.க.பாடசாலைக்கு அருகில் வடக்கு வாசிகசாலையும் 1947, 1948ம் ஆண்டுகளில் தோற்றம் பெற்றன. இங்கு பத்திரிகைகள், சஞ்சிகைகள் இடம்பெற்றன. வானொலிப்பெட்டி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. அதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் கேட்டனர்.
அனலைதீவு ஐயனார் கோயிலடியில் வாசிகசாலை ஒன்றும் அனலைதீவு வல்லியப்பன் கோயிலடி வாசிகசாலையும், துறைமுகப்பகுதியில் பாரதி சனசமூகநிலையமும், 2ம் வட்டாரப்பகுதியில் நாவலர் சனசமூகநிலையமும், 1994-1996 காலப்பகுதியில் வடலூர் இராசராஜேஸ்வரி சனசமூகநிலையம் 3ம் வட்டாரப்பகுதியில் ஆரம்பமாகியது. ஆனால் பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து இயங்கவில்லை என அறிகிறேன். இவ் வாசிகசாலைகளில் பத்திரிகைப்பகுதியுடன் நூல்கள் சேகரிக்கப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் பகுதியும் உருவாக்கப்பட்டிருந்தன. வருடாந்த நன்கொடை மூலமும் பொதுமக்களின் அன்பளிப்புகள் மூலமும் இந்நூல்கள் கிடைக்கப்பெற்றன.
அனலைதீவுப் பாடசாலைகளுக்கு கடமைநிமித்தம் வந்த வெளியூர் ஆசிரியர்களுக்கு பொழுதுபோக்கு வாய்ப்புக்களை இந்நூல்கள் வழங்கின. அவர்களின் தொடர்பால் இந்நிலையங்கள் மேலும் வளம் பெற்று சிறப்புடன் இயங்கின. விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், கிரிக்கெட், தாச்சி போன்றன ஆசிரியர்களாலும் கிராம இளைஞர்களாலும் மாணவர்களாலும் விளையாடப்பட்டன.
அவ்வாறே வாசிப்பு கலாசாரமும் இவ் ஆசிரியர்களினூடாக இந்நிலையங்களில் தூண்டப்பட்டன. பாடசாலை மாணவர்களின் வாசிப்புக்கு தீனிபோடவல்ல பயனுள்ள பலநூல்களை தமது சேமிப்பிலிருந்து ஆசிரியர்கள் வழங்கி ஊக்குவித்தார்கள். திரு.சு.மகாலிங்கம், திரு.புண்ணியசிங்கம் ஆகியோர் இவ்விதமாக ஊக்குவித்தார்கள். சதாசிவ மகாவித்தியாலயத்தின் நூலகமும் நூற்றுக்கணக்கான நூல்களைக் கொண்டிருந்தது. 1969ம் ஆண்டு கொண்டாடப்பட்ட கல்வித்திணைக்கள நூற்றாண்டு விழாவையொட்டி கல்வி அமைச்சால் இந்நூலகம் புனரமைக்கப்பட்டது. பல நூல்கள் வழங்கப்பட்டன. தீவுப்பகுதி வட்டார வித்தியாதரசி.திரு.ஜே.சீமான்பிள்ளையைப் போசகராகவும் உதவிப்போசகராக திரு.கு.வி.தம்பித்துரை, ஆP. திரு.க.தர்மலிங்கம் ஆகியோரும் பாடசாலை அதிபர் திரு.இ.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் 14 பேர் கொண்ட நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டு இயங்கியது.
வடலூர் அ.த.க பாடசாலையில் நல்ல பல நூல்களைக் கொண்ட நூலகமும் அமைக்கப்பட்டிருந்தன. திரு.ஐ.ஆ.இராமசாமி ஆசிரியரை தலைமை ஆசிரியராகக் கொண்டு இயங்கிய பாடசாலையின் நூலகம் கலைக்களஞ்சியம் என்னும் பெறுமதியான நூற்தொகுதிகளைக் கொண்டிருந்தது. காலப்போக்கில் இவை பழுதடைந்து அழிந்துவிட்டன. தற்பொழுது சதாசிவமகாவித்தியாலயத்தில் உலகவங்கியின் நிதியிடலுடன் பூரணமாக நூலகக் கட்டிடத்தொகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகவல் வளங்கள், தளபாடங்கள், கணனி போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாகப் பெற்றுள்ள நூலகம் கிடைக்கப் பெற்றுள்ளது.
தனிநபர் நூலகங்கள் வாசிப்பு ஆரிவத்தால் தூண்டப்பட்டு புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் சொந்தமாக வாங்கிப் படிக்கும் பழக்கம் அனலைதீவில் பலரிடம் ஏற்பட்டிருந்தது. ‘அதற்காக இங்கு குறிப்பிடப்படுபவர்கள் மட்டுமே அவ்விதமான சேமிப்புகளைக் கொண்டிருந்தார்கள். ஏனையோர் கொண்டிருக்கவில்லை’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
உயர்திரு.சொக்கலிங்கசுவாமிகள்: இவரது ஆன்மீக, யோகாசன ஈடுபாடு காரணமாக சமய சம்பந்தமான பல நூல்களையும் சஞ்சிகைகளையும் அரிய தகவற் சேகரிப்புகளையும் தேடி வைத்து தெற்கு முருகமூர்த்தி கோயிலடியில் மடம் அமைத்து பேணி வந்தார். யோகாசனப் பயிற்சிகள் வழங்கி வந்தார். துறவு வாழ்க்கை மேற்கொண்ட இவரது இந்நூல் தேட்டங்கள் காலவெள்ளத்தில் கரைந்துவிட்டமை மனம் வருந்தத்தக்கது. திரு.மு.வ.கணபதிப்பிள்ளை கிராமத்தின் பிரபல வர்த்தகராக இருந்தவர். இவரது கடைக்கே பத்திரிகைகள், சஞ்சிகைகள் விற்பனைக்கு வரும். இவரது கடைக்கு பத்திரிகைகள் வரும்வரை அதனைப் படிக்க வரும் கிராமப் பிரமுகர்கள் கடைப்படிக்கட்டிலிருந்து ஊர்விடயங்கள், உலக விடயங்கள் என்பன பற்றி உரையாடுவார்கள்.
ஆன்மீகம் முதல் அரசியல் வரை இங்கு அலசி ஆராயப்படும். கிராம உடையார் மதிப்புக்குரிய திரு.வைத்தியலிங்கம், சக வர்த்தகர் ச.கணபதிப்பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். கடைக்கு வருபவர்கள் உலக நடப்புக்களை அறிவதற்காகவும் இவர்கள் படித்துவிட்டு செய்யும் விமர்சனங்களைக் கேட்பதற்காகவும் மாலை வேளைகளில் ஒன்று கூடுவர். இவரது கடைக்கும் கிராமசபைக்கட்டிடத்துக்கும் பக்கத்திலிருந்த ஆலடி உண்மையிலேயே பெரிய அரட்டை அரங்கம் தான். திரு.வ.க.சிவஞானம் மேற்படி கணபதிப்பிள்ளையின் மகன். இக்காலத்தில் இவர் வவுனியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்திய, இலங்கை அரசியல் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் மற்றும் திராவிட இயக்கங்கள் சார்ந்த நூல்கள், பெரியாரின், அண்ணாவின் எழுத்துக்கள் போன்றன இவரது பிரதான சேமிப்பாக இருந்தன.
திரு.வே.சேதுகாவலர் திரு.கணபதிப்பிள்ளை அவர்களின் மருமகன் முறையானவர். இவரது வீட்டில் ஒரு பெட்டகம் நிறைய சங்க இலக்கியங்களும், சமய இலக்கியங்களும் இருந்தன. இவரது சகோதரர் திரு.வே.குமாரசாமி ஆசிரியரின் அனேகமான பாடத்துறை சார்ந்த, பிள்ளைகளின் கல்விக்காக வாங்கிய நூல்கள் தமிழ், ஆங்கிலம் என பலநூறு இருந்தன. திரு.வே.குகதாசன், திரு.வே.சேதுகாவலரின் சகோதரர். இவரும் நல்ல வாசகர். பலவகையான நூல்களைத் தேடிப்படித்தவர். திரு.மு.பழனி: அனலைதீவின் தேர்ந்த நல்ல வாசகர் எனலாம். ஆங்கிலம், தமிழ் நூல்கள் பலவற்றை சொந்தமாகக் கொண்டிருந்தவர். குறிப்பாக திரு.மு.வரதராசன், திரு.ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய அனைத்து நூல்களும் இவரின் வசம் இருந்தன. நல்ல பிறவுண் தாள் உறையிட்டு அவற்றை பேணி வந்ததுடன், புத்தகங்களை மிகவும் நேசித்தார். திரு.ஆறு.இராசேந்திரம், வாசிக்கத்தக்க எதுவானாலும் அதனை தவறாமல் வாசிப்பதனைத் தவமாகக் கொண்டவர். எழுத்தாற்றல் கைவரப் பெற இவரின் இவ்வாசிப்பு நேசிப்பே காரணமாக அமைந்தது. கவிதைகளில் பிரியமுடையவர். இலக்கியத்தின் எத்துறை சார்ந்தும் முயற்சிக்க வல்லவர். பாடசாலைப் பருவத்திருந்தே இவரது இலக்கிய ஆர்வம் இன்று உலகமறிந்த எழுத்தாளராக உயர உதவிக் கொண்டிருப்பதாகக் கூறலாம். திரு.அ.நாகராசா, சதாசிவ மகாவித்தியாலயத்தின் 6ம் வகுப்பிலிருந்தே வகுப்பு சகமாணவர்களிடையே வாசிப்பு பாலமாக இருந்தவர்.
தினமும் ஏதோ ஒரு நூலை வாசிப்பது என்ற சபதம் பூண்டு நாளும் அதனை கடைப்பிடிக்க நானும் அவரும் அனலைதீவின் ஒவ்வொருவர் வீட்டுப் படலைகளையும் திறந்தோம். அவ்வாறு வாசிக்க தேடிச் சென்ற வேளையில் சுவைக்க உதவியோரே மேலே சுட்டிக்காட்டிய நூல் தேட்டங்களைக் கொண்டிருந்தோர். இவ்வாறான வாசிப்புப் பழக்கம் எம்மில் தொற்றிக் கொள்ள உதவிய ஆசிரியர்கள் திரு.சு.மகாலிங்கம் அவர்களும், திரு.புண்ணியசிங்கம் அவர்களும் ஆவார். இவர்களின் வழிகாட்டலில் நூலை வாசிப்பதுடன் படித்த பின் அந்நூல் சம்பந்தமான விபரங்களை பதிந்து வைத்து இருபக்கத்தில் அந்நூலில் சொல்லப்பட்ட விடயங்களையிட்டு கட்டுரை எழுதவேண்டும். இவ்வாறு படித்ததும் அதுபற்றி எழுதுவதும் வாசிப்பு அனுபவத்தைத் தந்ததுடன் எழுத்தாற்றலையும் வளர்த்தது. அத்துடன் சொந்தமாக புத்தகங்களை வாங்கும் பழக்கத்தையும் உருவாக்கியது. இதன் விளைவாக பாடசாலை பருவத்திலேயே ‘மறுமலர்ச்சி நூலகம்’ என்னும் பெயரில் நடமாடும் நூலக சேவையை ஆரம்பித்தோம்.
எமது சேமிப்பில் இருந்த நூல்களை ஏனைய மாணவர்களுக்கும் ஊரவருக்கும் இலவசமாக வழங்கி வந்தோம். எமது நூற்சேகரிப்பில் பல்வேறு தலைப்புகளில் சுமார் 1200 நூல்கள் வரை இருந்தன. இவற்றில் பல அனலைதீவு பொது நூலகம் 1979ல் ஆரம்பமாகிய போது நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அனலைதீவில் பொதுசன நூலக வரலாறு:-
அனலைதீவு பொதுசன நூலகம் உள்ளூராட்சி மன்றங்கள் தமது நிருவாக எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்குப் பல்வேறு சேவைகளையும் வசதிகளையும் வழங்கி வருகின்றன. அப்பிரதேசத்தினது வளர்ச்சியைத் திறனுள்ள வகையில் பெருக்கி பொதுமக்களின் சுகாதாரம், பொதுப்பயன்பாட்டு வழிகள், பொதுப்பயன்பாட்டுச் சேவைகள் என்பன தொடர்பான பணிகளையாற்றி வருகின்றன. இவை மக்கள் பங்கேற்புடனான நிர்வாகத்தின் ஊடாக வசதிகளையும் சேவைகளையும் வழங்கி வருகின்றன.
அவ்வகையில் அனலைதீவு கிராமாட்சி மன்றம், அனலைதீவு கிராமசபை, VC என மக்களால் அழைக்கப்பட்ட அனலைதீவுக்கான உள்ளூராட்சி மன்றம் இறுதியாக 1977ம் ஆண்டு வரை பொதுமக்களின் பிரதிநிதிகளைக்கொண்ட நிருவாகமுறைமையைக் கொண்டிருந்தது. 1977ல் ஐக்கியதேசியக்கட்சியின் தேர்தல் வெற்றியையடுத்து, உள்ளூராட்சி மன்றங்களின் நிருவாகங்கள் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளர்களின் நிருவாகத்திற்குள் கொண்டுவரப்பட்டன. அவ்வகையில் 1977 வரை திரு.ஐ.சபாபதிப்பிள்ளை கிராமத்தலைவராக இருந்து வந்தார். பின்பு இந்நிருவாகம் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளர் நிருவாகம் கொண்டுவரப்பட்டது. இக்காலப்பகுதியில் ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு.S.சடாட்சரசண்முகதாஸ் விசேட ஆணையாளராகப் பொறுப்பேற்றார். இக்காலப்பகுதியில் தீவின் அபிவிருத்தி கருதி பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் இவரால் மேற்கொள்ளப்பட்டன. கிராமப் பொதுமக்களின் வேண்டுகோளினையடுத்து கிராமாட்சி மன்றம் பொதுநூலக சேவையை உருவாக்கத்தீர்மானித்தது. அதன்படி நூலகப் பொறுப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
1979ம் ஆண்டில் பிராந்திய உள்ளூராட்சித் திணைக்களத்தினதும் உள்ளூராட்சி அமைச்சினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து நூலகப் பொறுப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கான நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டதன் அடிப்படையில் நூலகப்பொறுப்பாளர் பதவியில் 28.11.1979ல் திரு.கணேசையர் சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இத்திகதி முதல் உத்தியோகபூர்வமாக அனலைதீவு பொதுசன நூலகத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகின.
அவ்வருடத்தின் நிதி ஒதுக்கீட்டின் முலம் 108 நூல்கள் கொள்வனவு வெய்யப்பட்டன. ஆரம்பத்தில் நூலகத்துக்கான தனியறை வசதியோ, தளபாட வசதியோ இல்லாதிருந்தன. எனவே கிராமசபையின் வடக்கு அறையில் கிராமசபை அலுவலகமும், தெற்கு அறையில் சித்த ஆயுர்வேத வைத்தியசாலையும் நடுவிலுள்ள கூட்ட மண்டத்தில் நூலகமும் ஒழுங்குபடுத்தப்பட்டன. கிராமசபைக்கூட்டங்களை நடத்துவதற்குரிய 12′ X 4′ மேசையே பத்திரிகைகள், சஞ்சிகைகள் இடுவதற்கான மேசையாகவும் பயன்பட்டது.
அனலைதீவு கிராமசபைக்கான வருமானம் பெரிதாக எக்காலத்திலும் இருந்ததில்லை. வண்டி வாகன உரிமம், புகையிலை பாடம் பண்ணும் வரி(குடில் வரி), மீன் பாடம் பண்ணும் வரி (வாடியமைத்தல்) போன்றனவே பிரதான வருமான மூலங்களாக இருந்தன. அனலைதீவிலுள்ள கடை உரிமங்களின் அளவு குறைவே. சந்தை வருமானம் என்று எதுவுமில்லை. இதனால் வருடாந்தம் உள்ளூராட்சி திணைக்கள மானியங்கள் மூலமும் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முலமும் நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அன்பளிப்பாக நூல்கள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன.
இதனால் இரவல் கொடுக்கும் பகுதி, உசாத்துணைப் பகுதி, பத்திரிகை சஞ்சிகைப்பகுதி என்பன காலப்போக்கில் உருவாயின. நூலக அங்கத்தவராக சேருவதற்கு ரூபா 5/= வைப்பாகச் செலுத்தவேண்டும். அவ்வகையில் இந்நூலகத்தின் முதல் அங்கத்தவராக திரு. பேரம்பலம் கணபதிப்பிள்ளை ஆசிரியர் இணைந்து கொண்டார். இவர் ஏற்கனவே 5ம் வட்டார மக்கள் பிரதிநிதியாக கிராமசபைக் காலத்தில் செயற்பட்டு தீவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவராவார். இனங்களுக்கிடையிலான மோதல் போக்குகள் கருக்கொள்ள ஆரம்பித்த காலப் பகுதியாகவும், அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பு வலிமை கொள்ளத் தொடங்கிய காலப்பகுதியாகவும் அமைந்த நிலையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மக்கள் மட்டத்தில் காத்திரமான வாசிப்பை தூண்டி நின்ற வேளையாகவும் அமைந்தமையால் இந்நூலகத்தின் சேவையை நாடுவோரின் தொகை அதிகரிக்கலாயிற்று. அன்பளிப்பு நூல்கள் அதிகரிப்பு, வாசகர் அதிகரிப்பு காரணமாக இரவல் வழங்கும் பகுதி, உசாத்துணை பகுதி, சிறுவர் பகுதி, வாசகர்சாலைப்பகுதி, என்பன படிப்படியாக உருவாக்கப்பட்டன. சபையின் மூலம் நூல்கள் வைக்க தரப்பட்ட அலுமாரிக்கு மேலதிகமாக கண்ணாடி அலுமாரி ஒன்றை அனலைதீவு சனசமூக நிலையங்களின் சமாசம் நாடக நிகழ்ச்சி நடாத்திப் பெற்ற நிதி மூலம் அன்பளிப்பாக வழங்கியது.
விசேட ஆணையாளராக திரு.S.பாலரத்தினம் அவர்கள் (ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர்) இருந்தபோது வடக்குப்பக்கமாக இருந்த அலுவலப் பகுதியுடன் சேர்த்து ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களின் பன்முகவரவு செலவுத்திட்ட மூலம் ஒதுக்கீடு செய்த ரூ 25,000/= மூலம் நூலக அறை ஒன்று அமைக்கப்பட்டது. நூலக அறை மூலம் கூடியளவு விசாலமான இடவசதி நூலகத்துக்கு அக்காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. நூலக ஆலோசனைக்குழு ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளுடன் நூற்கொள்வனவு, நூலகத் தளபாடங்கள் போன்ற விடயங்களில் சிபார்சுகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
நூலகவாரம் ஒன்றினைச் செயற்படுத்தியதன் மூலம் கிராம மட்டத்திலிருந்து கணிசமான நல்ல நூற்கள் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றன. நூலக ஆலோசனைக்குழு ஒத்துழைப்புடன் நூலகச் சஞ்சிகையாக அனலைதீவின் திறன்களை வெளிக்காட்டும் வண்ணம் கையெழுத்துச்சஞ்சிகையாக ‘அனலை’ வெளியிடப்பட்டது. இது 1985 ஜனவரி முதல் மாதாமாதம் வெளிவந்தது. சுமார் இருவருடங்கள் இச்சஞ்சிகை வெளிவந்தது. நூலகப்பொறுப்பாளர் சௌந்தரராஜன் வெளியீட்டாளராக இருக்க நூலக ஆலோசனைக்குழு மூலம் இணை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு ‘அனலை’ வெளிவந்தது.
கிராமம் பற்றிய பல தகவல்கள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நாடகங்கள் என பலதுறை சார்ந்த ஆக்கங்கள் இதில் இடம்பெற்றன. அவ்வாறே மாதாந்த கருத்தரங்கம் தொடர் மூலம் மாணவர்களின் நிகழ்ச்சிகளும் பொதுவான தலையங்கங்களில் சிறப்புரைகளும் இடம்பெற்றன. நூலக ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து சென்று வாழ்ந்த வாசகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ரூபா 30,000/= நன்கொடையாகக் கிடைக்கப் பெற்றது. இப்பணத்தின் மூலம் நூலகத்திற்கு அண்மையில் இருந்த திருமதி.ஆனந்தி சண்முகநாதனின் ஆதனத்தில் 2 பரப்பு ரூபா 16,000/= வுக்கு விலைக்குப் பெறப்பட்டது. திருவாளர்.மு.சீவரெத்தினம் ஆசிரியரின் ஒத்துழைப்பினால் இக்காணி கிடைக்கப்பெற்றது.
நூலகக் கட்டிடம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டு ரூபா 85,000/= மாவட்ட அபிவிருத்திச் சபையால் ஒதுக்கப்பட்டது. அத்திவரக்கல் நாட்டப்பட்ட போதிலும் நிதி வேறு வேலைகளுக்காக திருப்பி எடுக்கப்பட்டதால் நூலகம் அமைக்கும் பணி தடைப்பட்டு இன்றுவரை சாத்தியமாகவில்லை. ஆலோசனைக்குழுத் தீர்மானப்படி மிகுதிநிதி வட்டிவருமானம் மூலம் சஞ்சிகைகள் பல நூலகவாசகருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன. 1981 முதல் மாவட்ட அபிவிருத்திச் சபை முறை ஏலவே இருந்த கிராமசபை முறை ஒழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 1981 ஜுலையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து யாழ். அபிவிருத்திச்சபை மக்களின் வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டது. மாவட்ட அபிவிருத்திச் சபை காலப்பகுதியில் நூலகத் தளபாடங்கள் பல பெற்றுக் கொள்ளப்பட்டன. நூல்களுக்கான ஒதுக்கீடு கணிசமாக உயர்வடைந்தது. இதன்படி வருடாந்தம் நல்ல பல நூல்களை சேர்க்கையில் இணைக்க முடிந்தது. குறித்துரைக்கப்பட்ட உத்தியோகத்தர், அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் பதவியில் இருந்த திரு.A.சேவியர், திரு.இ.பத்மநாதன், திரு.த.புண்ணியசிங்கம் ஆகியோரின் செயற்றிறன் மிக்க நிருவாக அணுகுமுறைகளால் நூலகத்தின் வளங்கள் அதிகரித்து தீவகத்திலேயே சிறப்பான ஒரு நூலகமெனப் பாராட்டும்படியாக நூலகம் வளர்ந்தது.
1987ல் மாறுபட்ட அபிவிருத்திச் சபை முறை கைவிடப்பட்டு பிரதேச சபை முறை 1988 ஜனவரி 1ந் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதே காலப்பகுதியில் வடக்கு-கிழக்கு மாகாணசபையும் 1987ல் உருவாக்கப்பட்டது. மாகாணசபை நிருவாகத்திற்குட்பட்டு பிரதேசசபைகள் இயங்க ஆரம்பித்தன. பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் ஆரம்பத்தில் நடத்தப்பெறாமையால் விசேட ஆணையாளர்களின் நிருவாகத்தின் கீழாக பிரதேச சபைகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி ஊர்காவற்றுறை பிரதேசசபையின் கீழாக அனலைதீவு உபஅலுவலகம் அமைந்தது.
ஊர்காவற்றுறை பிரதேசசபையில் விசேட ஆணையாளர்களாக இருந்த திரு.சி.ரகுலேந்திரன், திரு.ஹெக்டர் யோசெப், திரு.இ.இளங்கோ, திரு.து.ஓ.செல்வநாயகம் ஆகியோர் அனலைதீவு நூலகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறுவழிகளிலும் உதவிகள் நல்கினார்கள். அவ்வாறே சபையின் செயலாளர்களாக விளங்கிய திரு.சாள்ஸ் பொன்கான், திரு.சி.இராசதுரை, திரு.சி.சந்திரசேகரம், திரு.கு.பணேசலிங்கம் ஆகியோரும் திரு.இரா.லோகநாதன், திரு.கணேசானந்தராஜா ஆகியோரும் நூலகத்தை மேம்படுத்த ஆவன செய்து வந்துள்ளார்கள்.
திரு.புண்ணியசிங்கத்தின் பதவிக்காலத்தின் பின் உபஅலுவலகம் பொறுப்பதிகாரியாக திரு.இ.து.சிவராசா கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை அடுத்து 1990 முதல் 1996 மே வரை பிரதான நிலப்பகுதியான யாழ்ப்பாணத்துடன் தொடர்பற்று இருந்தோம். பிரதேச சபையும் சொந்த இடத்திலிருந்து பல இடங்களுக்கு இடப்பெயர்வுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இயங்கியது. இதனால் அனலைதீவு உபஅலுவலக நிருவாகச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமாகின. நூலக பொறுப்பாளர் சௌந்தரராஜன், காவலாளி வி.பேரம்பலம், சுகாதாரத்தொழிலாளி சி.கதிரவேலு மூவர் மட்டுமே அனலைதீவில் இருந்தனர். இக்காலப்பகுதியில் தலைமை அலுவலகர் தொடர்புகள் இல்லாவிடினும் இப்பிரசேத்திலுள்ள அரசாங்க, உள்ளூராட்சி, கூட்டுறவு ஸ்தாபனங்கள் விசேடமாக இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் தமது சேவைகளை ஆற்ற விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பிரகாரம் நூலகப்பகுதி மட்டும் எப்பொழுதும் போல் தன் செயற்பாட்டைத் தொடர்ந்தது. பத்திரிகைகள் வரமுடியாத சூழ்நிலை நூல்கள், சஞ்சிகைகள் கிடைக்காத சூழ்நிலை ஊழியர்களின் சம்பளம் முதலியன வழங்கப்படாதநிலை நாளாந்த செயற்பாடுகளுக்குரிய காகிதாதி உபகரணங்கள் தரப்படாத நிலை போன்ற பல தடைகள் இருந்தபோதிலும் தளரா ஊக்கத்துடன் நூலகத்தின் செயற்பாடுனள் இடையறாது இருந்தன. இதே காலப்பகுதியில் எழுவைதீவு நூலகம், கிராமசபைக்கட்டிடம் பாதுகாப்பு படையினர் முகாமாக இருந்தமையால் மூடப்பட்டிருந்தது.
மேலதிக அதிகார அதிபராக செயற்பட்ட திரு.க.சண்முகநாதன் அவர்களும் ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட திரு.து.மு.செல்வநாயகம் அவர்களும் தீவுப்பகுதிகளின் நிருவாக ஒழுங்கமைப்புகளை, காரைநகர் கடற்படை தளபதியினதும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி செயலாளர் நாயகம் திரு.K.N.டக்ளஸ் தேவானந்தா அவர்களதும் ஆலோசனைகளுக்கமைய உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
யாழ். தொடர்பற்றதால் தீவகப் பகுதி பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கவும், இங்கிருந்து மக்களுக்கான சேவைகள் தொடர்பறாது பேணப்படவும் செயலாளர் நாயகம் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி 1993, 1994 ஆண்டுகளில் பன்முக வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் நூலக சேவைக்கு வழங்கப்பட்டன. சுமார் 10 லட்ச ரூபாய் பெறுமதியான நூல்கள் கொழும்பு சென்று கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு நூலக பொறுப்பாளரால் கொண்டுவரப்பட்டன. இவை அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு, ஊர்காவற்துறை நூலகங்களுக்கு பங்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதன்மூலம் இப்பகுதி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் தமது கல்விக்காக நூற்தேவைகளை பெற்றும் கொண்டார்கள். பொதுமக்களுக்கான பலவகை நூல்களும் இதன்மூலம் கிடைத்தன.
பின்னர் பிரதேச சபை தேர்தல்களில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஈடுபட்டு பெருவெற்றி பெற்றபோது மக்கள் பிரதிநிதிகள் பலர் நிருவாகத்தில் தெரிவு செய்யப்பட்டுச் செயற்பட்டார்கள். இதனால் 1996 லிருந்து பலவகையிலும் நூலகச் செயற்பாடும் முன்னேறின. 2000மாவது ஆண்டில் நூலகர் சேவையில் இணைந்து கொண்ட திரு.சௌந்தரராஜன், பொறுப்பதிகாரி திரு.சி.சிவஞானம் ஆகியோரின் செயற்பாட்டின் விளைவாக திரு.மு.சீவரெத்தினம் ஆசிரியரின் வீடு நூலகத்தின் பாவனைக்காக ரூபா 4 லட்சத்துக்கு கொள்வனவு செய்யப்பட்டது. இந்நூலகத்தின் முதலாவது நூலகராக சேவையாற்றிய திரு.க.சௌந்தரராஜன் 2003 ஜனவரி 1ந் திகதி முதல் ஊர்காவற்துறை பொதுநூலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அனலைதீவு நூலகத்தினை செல்வி.லதா(நூலக சேவகர்) அவர்கள் பொறுப்பேற்றார். இவரது காலத்திலும் நல்ல பல நூல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில் 2005 மார்ச் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இடமாற்றத்திட்டத்துக்கு அமைய சாவகச்சேரி பிரதேச சபையிலிருந்த திரு. சிவசோதிலிங்கம் அவர்கள் நூலகராகப் பொறுப்பேற்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவரது காலப்பகுதியில் பிரதேச சபை செயலாளராக இருந்த திரு.கு.கணேசலிங்கம், திரு.இ.லோகநாதன், திரு.ஏ.கணேசானந்தராஜா ஆகியோர் இந்நூலகத்தின் பெறுமதி மிக்க நூலகச் சேர்க்கைக்கு மேலும் பல நூல்களை வழங்கி வருவதுடன் போதிய தளபாடவசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். நூலகப்பகுதிக்கான மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் செல்வி.ச.தர்மிளா நூலக சேவகராகப் பணியாற்றுகின்றார். நூல்களுக்கான பட்டியலாக்க அட்டைகள் தயாரித்தல் பணி நூலகரால் முன்னெடுக்கப்படுகின்றது. நூலக ஆலோசனைக்குழு, வாசகர் வட்டம் என்பன நூலகங்களின் சிறப்பான செயற்பாட்டுக்கு மக்களின் பங்களிப்பை வழங்க உதவி புரிவனவாகும்.
உப அலுவலகப் பொறுப்பதிகாரி திரு.மெடோன் அவர்கள் மக்களின் பங்களிப்புடனான பல நூலகச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி ஊக்கமளித்து வருகின்றார். வாசிப்பு கலாசாரம் தொடர பலமுனைப்பட்ட செயற்பாடுகள் தேவையாகும். நூலகத்தின் செயற்பாட்டுக்கு மேலும் பல உதவிகள் கிராம மக்கள் அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வித உதவிகள் இன்னும் காத்திரமான வழிவகைகளில் வழங்கப்படுவது அவசியமாகும்.
அனலைதீவு கலாச்சார ஒன்றியத்தின் வாசகர் வட்டத்தின் மக்கள் பங்கேற்புக்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட தற்போது 1,150,000 லட்ச ரூபா அளவிலான கட்டிடத் திருத்தவேலைகளிற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக நூலக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அனலைதீவு நூலகம் புனரமைப்பிற்கு முன்னர்
al2
அனலைதீவு நூலகம் புனரமைப்பிற்கு பின்னர் (2012)
al3
பொது நூலகம் ஒரு சமூகத்தின் பல்கலைக்கழகம் என்பர். எவரும் இங்கு இலகுவாகத் தமக்குத் தேவையாக தகவல் வளங்களை அணுக, தேடலை நிறைவேற்ற முடியும். அனலைதீவு நூலகச் சேர்க்கையிலுள்ள பல நூல்கள் ஏனைய இடங்களில் பெறமுடியாதனவாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் கிராமத்தின் தகவல் நிலையமாகவும், அறிவுச் சாதனங்களின் களஞ்சியமாகவும் இது விளங்குகின்றதெனலாம்.
By – Shutharsan.S
நன்றி  – ஆக்கம்: – திரு.க. சௌந்தரராஜன், இளைப்பாறிய அனலைதீவு நூலகர்.
தகவல் மூலம் – www.analaiexpress.ca இணையம்

பதிப்பாசிரியர்

     சி. சுதர்சன்

இலங்கை இலக்கியம், நூல்கள்



  • ஈழத்துக் கடலோரக் கிராமத்துப் பேச்சு வழக்கு
  • யாழ்ப்பாண பேச்சு வழக்கு
  • துலைக்கோ போறியள்
  • அம்மான் என் கண்
  • ஆடக சௌந்தரி
  • ஞானப் பள்ளு
  • ஈழநாடு பத்திரிகை
  • வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் கிரியா கரும விளக்கம்
  • கிராமத்து வாசம் – குழந்தைப் பாடல்கள்
  • புராணம்
  • இசை நாடகமும் ஈழத்தின் கர்நாடக இசை வரலாறு
  • சிலோன் சின்னையா
  • பேய் – கிராமத்து சொல் வழக்கு
  • சுதந்திர தாகம் – குறுந்திரைப்படம்
  • “வெள்ளைப்பூக்கள்”- குறும்படம்
  • ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள்
  • நிமிர்வு – சிறுகதைத் தொகுப்பு
  • குப்பிளானின் ‘உதிரிகளும் …’ உதிரிதானா?
  • பட்டிப் பூ – கவிதை
  • நல்லம்மா – இலக்கிய மலர்
  • கல்லூரி நாடகங்கள்
  • ஈழத்து மெல்லிசைப் பாடல்கள்
  • அந்தக் காலத்து யாழ்ப்பாணம்
  • பூவரசம் பூவே நலமா – கவிதை
  • கனகலிங்கம் சுருட்டு- சிறுகதை
  • பனங்கொட்டை பொறுக்கி- சிறுகதை ஆவணம்
  • ஈழத்து மெல்லிசை பாடல்கள்
  • நகரம்- கவிதை
  • ஆனந்தமயில் ‘நினைவிலிருந்து சொற்களுக்கு’
  • அர்ச்யாகப்பர் அம்மானை
  • வையாபாடல்
  • பெரிய‌ எழுத்து சிறுக‌தை
  • ஈழத்து பத்திரிகைத்துறையின் வளர்ச்சி
  • யாழ்ப்பாண பதுறுத்தீன் புலவர்
  • பரராசசேகரம்
  • செகராசசேகரம்
  • செகராசசேகர மாலை
  • திருக்கரைசைப் புராணம்
  • கண்ணகி வழக்குரை
  • கதிரமலைப் பள்ளு
  • தக்கிண கைலாய புராணம்
  • வணிகர் வரலாறு
  • வேளாளர் என்ற சாதிப்பிரிவு எப்படி உதயமானது
  • வெளிச்ச வீடு -கவிதையும் படமும்
  • பொன்மணி – யாழ்ப்பாண திரைப்படம்
  • அயத்து போனன்..
  • வாடைக்காற்று – யாழ்ப்பாண திரைப்படம்
  • குப்பிளான் கிராமிய கீதம்
  • திரு(வெண்)பாவை – கவிதைகள்
  • சிங்ககிரிக் காவலன்
  • வாணீபுர வணிகன்
  • சதியின் பரிசு
  • மகாகவியின் மறக்க முடியாத குறும்பாக்கள்
  • ‘மோகனாங்கி’ முதல் தமிழ் வரலாற்று நாவல்
  • கத்தரி வெருளி
  • ஆடிப்பிறப்பு
  • சந்நிதியான் அற்புதங்கள் நூல் பாகம் இரண்டு
  • நெடுந்தீவு ஆச்சிக்கு- கவிதைகள்
  • சொற்கள் போல் ஒளியை விழுங்குதல்-கவிதை
  • விமானங்கள் மீண்டும் வரும்
  • அருளர் எழுதிய லங்காராணி
  • வேரூன்றி விழுது பரப்பும் ஆலமரம்
  • எனக்குப் பயமாய்க்கிடக்குது – ஈழத்து சிறுகதை
  • சபிக்கப்பட்ட உலகு – ஈழத்து கவிதை
  • கருச்சிதைவு – ஈழத்து சிறுகதை
  • ஈழத்தில் நாடகமும் நானும்
  • அன்னை இட்ட தீ
  • தமிழன் மாட்சி நூல்
  • வன்னி அடங்காப்பற்று
  • 80 ல் இருந்து 88 வரை
  • யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே
  • “12 மணி நேரம்” ஆவணநூல்
  • கீரிமலையினிலே கவிதை நூல்

  • நன்றி :http://www.ourjaffna.com/
  •